நொய்டா இரட்டை கோபுரம் இடிப்பு.. காற்று மாசை கண்டறிய.. களமிறக்கப்பட்ட நவீன இயந்திரம்.. இதை பாருங்க!
லக்னோ: அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதில் விதிகளை மீறியதாக புகார் எழுந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள இரட்டை அடுக்குமாடி கட்டிடத்தை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்று இந்த கட்டிடங்கள் இடிக்கப்பட உள்ள நிலையில், இந்த பகுதியிலிருந்து வெளியேறும் தூசிகளால் காற்று மாசு எவ்வளவு ஏற்படும் என்பதை கணிக்க நவீன இயந்திரங்கள் கட்டிடங்களின் அருகே வைக்கப்பட்டிருக்கின்றன.
நொய்டா இரட்டை கோபுரம்..328 அடி உயர கட்டிடம்: உச்சநீதிமன்ற உத்தரவால் இன்று தகர்க்கப்படுகிறது!
ஏற்கெனவே டெல்லியில் காற்று மாசு அவ்வப்போது அபாயகரத்தை தாண்டி பதிவாகும் நிலையில், டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவில் இந்த கட்டிட இடிப்பு மூலம் உருவாகும் மாசைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதுவும் பெருநகரங்களில் தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்களுக்கு இருப்பிட வசதிகளை உருவாக்கிடவும், இதனை உருவாக்கும் நிறுவனங்களுக்கு இடையேயுள்ள போட்டியும் இம்மாதிரியான விதி மீறல்களுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டா பகுதியில் உள்ள ஒரு இரட்டை அடுக்குமாடி குடியிருப்பை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சுமார் 100 மீட்டர் உயரம் கொண்ட இந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒவ்வொன்றும் 40 தளங்களை கொண்டுள்ளது. ஆனால் இது பசுமையான இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், இதை கட்டியதில் விதி மீறல்கள் அதிக அளவில் நடந்துள்ளது என்றும் உச்சநீதிமன்றத்தில் குடியிருப்பு வாசிகளால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2012ல்) வழக்கு தொடரப்பட்டது. இது குறித்த வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதமே இந்த கட்டிடங்களை இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் சிலபல பாதுகாப்பு காரணங்களுக்காக ஓராண்டாக இந்த இடிப்பு தள்ளிப்போயுள்ளது.
வெளிநாடுகளில் இதுபோன்று பெரிய கட்டிட இடிப்புகள் அருகில் உள்ள கட்டிடங்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடந்தேறியுள்ளன. ஆனால் இந்தியாவில் இதுபோன்ற கட்டிட இடிப்புகள் பெரிய அளவில் நடந்திருக்கவில்லை. எனவே பாதுகாப்பு அம்சங்களை கவனமாக கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால் இந்த தாமதங்கள் தவிர்க்க இயலாததாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட இந்த கட்டிடங்கள், இன்று (ஆகஸ்ட் 28ம் தேதி) மதியம் 2.30 மணிக்கு இடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடிப்புக்கு சுமார் 3,700 கிலோ வெடிமருந்துகள் தேவைப்படும். இதன் மூலம், ரிக்டர் அளவில் 4 வரை அதிர்வுகள் உண்டாகும். இவ்வாறு உண்டாகும் அதிர்வுகள் 30 மீட்டர்கள் வரை உணர முடியும். ஆனால் நல்வாய்ப்பாக, நொய்டா நகரம் ரிக்டர் அளவு 6 வரை நில அதிர்வுகளை தாங்கும் என்பதால் எந்த பிரச்னையும் ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த இடிப்பு காரணமாக அக்கம் பக்கத்தில் உள்ள சுமார் 7,000 பேர் காலை 7 மணிக்கு இந்த பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரவர் குடியிருப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல 28ம் தேதி காலை முதல் மாலை 4 மணி வரை எரிவாயு மற்றும் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்படும். இந்த இடிப்பு மூலம் உருவாகும் காற்று மாசை கணக்கிட இப்பகுதிகளில் நவீன இயந்திரங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கெனவே தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு அடிக்கடி அபாய நிலையை கடந்து வரும் நிலையில் இந்த கட்டிட இடிப்பால் டெல்லிக்கு அருகே உள்ள நொய்டாவிலும் மாசு அதிகரிப்பதை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.