4 குழந்தைகளுக்கு அப்பா செய்யுற காரியமா இது.. ச்சீ.. உ.பியில் 5 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
லக்னோ: உத்திரப் பிரதேச மாநிலத்தில் 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை குற்றம்சாட்டப்பட்டுள்ளவரை தேடி வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் இதுபோன்ற தொடர் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாகவும் இதிலிருந்து குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

காசியாபாத்
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத் அருகே உள்ள கன்வானி கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை கூறியுள்ளதாவது, "இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றுள்ளது (அக்.28). புகார் குறித்து விசாரணை மேற்கொள்கையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, கன்வானி கிராமத்தில் இளம்பெண் ஒருவர் தனது 5 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இவர் மருத்துவமனையில் கடைநிலை ஊழியராக பணியாற்றி வரும் நிலையில் சம்பவம் நடந்த அன்று இரவு 7 மணியளவில் வீட்டுக்கு வந்து சேர்ந்துள்ளார்.

பாலியல் வன்கொடுமை
அப்போது அவரது மகள் அழுதுகொண்டே இருந்துள்ளார். இது குறித்து விசாரித்த தாயாருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. இவர்களது மேல் வீட்டில் வசித்து வரும் 27 வயது இளைஞர் ஒருவர் சிறுமியை விளையாட தனது வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார். அங்கு அவரை பாலியல் வன்கொடுமை (digitally raped) செய்துள்ளார். இதனால் வலியை தாங்க முடியாத சிறுமி தனது தாயிடம் அழுதுகொண்டே இதனை கூறியுள்ளார். இதனையடுத்து தாய் சம்பந்தப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வழக்குப்பதிவு
பின்னர் காவல்துறையில் புகார் அளித்தார். புகாரை பெற்ற நாங்கள் விசாரிக்க சம்பந்தப்பட்ட வீட்டுக்கு செல்வதற்கு முன்னர் குற்றம்சாட்டப்பட்டவர் தலைமறைவாகிவிட்டார். அவருக்கு ஏற்கெனவே திருமணமாகி 4 குழந்தைகள் இருக்கின்றன. அவரை தீவிரமாக தேடி வருகிறோம். விரைவில் கைது செய்யப்படுவார்" என்று காவல்துறை அதிகாரி தேவ்பால் சிங் கூறியுள்ளார். மேலும் "புகாரின் அடிப்படையில் குற்றவாளியை கண்டுபிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிர்ச்சி
அவர் மீது IPC பிரிவுகள் 376, 323, 506 மற்றும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை இரவு 8 மணியளவில் குற்றவாளியின் செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் இந்திராபுரத்தில் உள்ள ஜெய்ப்ரியா மால் அருகே கடைசியாக அவர் இருந்துள்ளதாக செல்பொன் டவர் லொகேஷன் அடையாளம் காட்டியுள்ளது" என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார். 5 வயது சிறுமி ஒருவர் அக்கம்பக்கத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications