டெய்லி 4 மணி நேரம் பவர் கட் பண்றாங்க.. உத்தர பிரதேசத்தில் கதறும் மக்கள்.. யோகி மீது கடும் விமர்சனம்
லக்னோ: யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆளும் உத்தரப் பிரதேசத்தில் தினமும் 4 மணி நேரம் வரை மின்வெட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மின் வெட்டு தொடர்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் சமூக ஊடக தளமான 'LocalCircles', மாநிலம் முழுவதும் நிலவும் மின்வெட்டு குறித்து ஓர் கணக்கெடுப்பை மேற்கொண்டது. 4,206 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் சுமார் 74 சதவிகிதம் பேர் மின்வெட்டை அனுபவிப்பதாக கூறியுள்ளனர். இதில் 55 சதவிகிதம் பேர் 4 மணி நேரம் வரை தொடர் மின்வெட்டை எதிர்கொள்வதாக கூறியுள்ளனர். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் 'உத்தரப் பிரதேச பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் (UPPCL)' அமைப்புதான் மின் விநியோகத்தை நிர்வகித்து வருகிறது.

இந்நிலையில் இதன் தலைவர் தேவராஜிடம் இது குறித்து கேட்கப்பட்டபோது, மின்வெட்டு பரவலாக இருப்பதை அவர் ஒப்புக்கொண்டார். மட்டுமல்லாது UPPCL தொடர் நட்டத்தில் இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். அதாவது ரூ.1 லட்சம் கோடி வரை UPPCL-ல் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்ய தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், மீட்டர் மற்றும் பில்லிங் நடைமுறைகளை மேம்படுத்தவும், மின் திருட்டுகளால் ஏற்படும் வரி இழப்பைக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மொத்த பிரச்னைகளுக்கும் அரசு கடந்த காலங்களில் UPPCLக்கு போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்யாததே காரணமாக சொல்லப்படுகிறது. உத்தரப் பிரதேசத்தில் இதுவரை யாரும் தொடர்ச்சியாக 6 முறை முதலமைச்சராக இருந்ததில்லை. ஆனால் இந்த முறை யோகி ஆதித்யநாத் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சராக நீடித்து வருகிறார். இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆனால் மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்யும் UPPCLக்கு இந்த டபுள் என்ஜின் அரசு போதிய நிதி ஒதுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.
போதிய நிதி ஒதுக்காததால் UPPCL-யின் உள்கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக மேம்படுத்த முடியவில்லை. இதனால் அதிகரித்து வரும் மின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்று தொழிற்சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. இம்மாநிலத்தில் 74 சதவிகிதம் பேர் மின்வெட்டை எதிர்கொள்கின்றனர். இதில் 19 சதவிகிதம் பேர் 1-2 முறை மின்வெட்டை எதிர்கொள்கின்றனர். மற்றொரு 19 சதவிகிதம் பேர் 3-5 முறையும், 30 சதவிகிதம் பேர் 6-10 முறையும், 6 சதவிகிதம் பேர் 20க்கும் அதிகமான முறையும் மின்வெட்டை எதிர்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications