புதிய திட்டங்கள்.. தேர்தலுக்கானது அல்ல! எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பிரதமர் மோடி விளக்கம்!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, நலத்திட்டங்கள் தொடங்கி வைப்பதை தேர்தலுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.
இன்று உத்தரப் பிரதேசத்தின் புனே, கோலாப்பூர், குவாலியர், ஜபல்பூர், டெல்லி, லக்னோ, அலிகார், அசம்கர் , சித்ரகூட், மொரதாபாத், ஷ்ரவஸ்தி மற்றும் அடம்பூர் என 12 விமான நிலையங்களில் புதிய முனையக் கட்டிடங்களை திறந்து வைத்து ரூ.42,000 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகளை மோடி தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் தொடங்கி வைக்கும் வளர்ச்சி திட்டங்களை தேர்தலுடன் தொடர்புப்படுத்தி பார்க்கக்கூடாது” என்று கூறியுள்ளார். அதாவது, “இன்று போலவே 2019ம் ஆண்டும், நான் தொடங்கி வைத்த திட்டங்கள் தேர்தலுக்கானவை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்திருந்தன. ஆனால், இன்று அந்த திட்டங்கள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன.
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும் என்று நான் உழைத்துக்கொண்டிருக்கிறேன். கடந்த காலங்களில் ஆட்சியாளர்கள் மக்களை முட்டாளாக்கும் அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார்கள். தேர்தல் முடிந்தவுடன் இந்த அறிவிப்புகள் அனைத்தும் காணாமல் போய்விடும்.
நானும் சில நாட்கள் எதிர்க்கட்சிகள் என்னதான் செய்தன? என்று யோசித்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அறிவித்த திட்டங்களை செயல்படுத்த 30-35 ஆண்டுகளை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்” என்று எதிர்க்கட்சிகளை விமர்சித்திருக்கிறார்.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேச மாநிலம் மிகவும் முக்கியமானதாகும். வேறெந்த மாநிலங்களை காட்டிலும், இங்குள்ள லோக்சபா தொகுதிகளின் எண்ணிக்கை அதிகம். உத்தரப் பிரதேசத்தையும், பீகாரையும் எடுத்துக்கொண்டால் சுமார் 80+40 என 120 தொகுதிகள் இருக்கின்றன. தேர்தலில் பெரும்பான்மை பெற வேண்டும் எனில் இந்த இரண்டு மாநிலங்களில் முழு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
எனவேதான் பிரதமர் மோடி அடிக்கடி உத்தரப் பிரதேசத்திற்கு வருகிறார் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications