விவசாயிகள் படுகொலை.. 'நாட்டு மக்களுக்கு பதில் சொல்லுங்கள் பிரதமரே..' துளைத்தெடுத்த பிரியங்கா காந்தி
லக்னோ: உத்தரப் பிரதேச வன்முறைக்குக் காரணமான அமைச்சரின் மகனைக் கைது செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய பிரியங்கா காந்தி, இதில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரே அணியில் ஒன்று திரள வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
லக்கிம்பூர் கெரி சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் விவசாயிகள் படுகொலை சம்பவத்திற்குக் காரணமானவர்களை அரசு ஏன் கைது செய்யவில்லை எனக் கேள்விகளை எழுப்பி உள்ளார்.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி ட்விட்டரில் வெளியிட்ட விடியோவில், "உங்கள் ஆட்சியில் அமைச்சரின் மகன் ஒருவர் விவசாயிகளைத் தனது காரை ஏற்றி கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த விடியோவைப் பார்த்து, அமைச்சர் ஏன் பதவி நீக்கம் செய்யப்படவில்லை, அவரது மகன் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்று நாட்டுக்குச் சொல்லுங்கள்? என்னைப் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களை எந்த உத்தரவும் பிடிவாரண்ட் இல்லாமல் கைது செய்துள்ளீர்கள்.

குற்றவாளிகள்
குற்றவாளி ஏன் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார் என அறிந்து கொள்ள விரும்புகிறேன். லக்னோவில் நடந்த ஆசாத் கி அம்ரித் மஹோத்ஸவ் விழாவிற்குப் பிரதமர் தலைமை வகித்தபோது, விவசாயிகள் நாட்டுக்குச் சுதந்திரம் பெற்றதை நினைவில் கொள்ள வேண்டும், இப்போது கூட, அவர்களின் மகன்கள் தேசத்தின் எல்லைகளைப் பாதுகாத்து வருகின்றனர். பல மாதங்களாக, விவசாயிகள் தங்கள் குரலை எழுப்ப முயல்கிறார்கள்.

விவசாயிகள் தான் ஆன்மா
ஆனால் நீங்கள் அதைக் கண்டு கொள்ளக் கூட வில்லை. லக்கிம்பூர் வரும்படி கேட்டுக்கொள்கிறேன். தேசத்தின் ஆன்மாவான நம் விவசாயிகள் நமக்குச் சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தவர்கள். அவர்களின் வலியைக் கேளுங்கள். அவர்களைப் பாதுகாப்பது உங்கள் கடமை. அரசியலமைப்பின் கடமை. அரசியலமைப்பு உங்களுக்குக் கொடுத்த பொறுப்பு" எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, லக்கிம்பூர் கெரி போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு ஆறுதல் கூற சென்ற பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்திர பிரதேசம்
உத்திர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்குத் துணை முதலமைச்சர் கேசவ் பிரசாத் மவுரியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டனர். துணை முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பாஜகவினர் சென்ற வாகனங்கள் போராட்டம் நடைபெற்ற இடம் வழியாகச் சென்றபோது, வாகனங்களை நோக்கி கல்வீச்சு நடைபெற்றதாகக்கூறப்படுகிறது.

என்ன நடந்தது
குறிப்பாகச் சம்பவம் நடைபெற்றபோது, மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, கேசவ் பிரசாத் மவுரியா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருக்கின்றனர். அப்போது, அவர்களுக்கு விவசாயிகள் கருப்புக் கொடி காட்டினர். இதையடுத்து, விவசாயிகளுக்கும், பாஜக தொண்டர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. துணை முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர் ஆகியோருடன் வந்த வாகனம் திடீரென விவசாயிகள் கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் காயமடைந்தனர். வாகனம் கூட்டத்திற்குள் புகுந்ததில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 விவசாயிகள் படுகாயம் அடைந்தனர். இது தொடர்பாகக் கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications