ராகுல் காந்திக்கு சொந்தமா கார், வீடு இல்லை.. கடன் மட்டுமே எவ்வளவு தெரியுமா?
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி, தனக்கு 49 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாக, தனது பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. இதற்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து, 2வது தொகுதியாக உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் காந்தி தனது தாய் சோனியா காந்தியோடு சென்று நேற்று முன்தினம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவுடன் தனது சொத்து விவரங்களையும் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துள்ளார் ராகுல் காந்தி. அதில் அவர் வெளியிட்டுள்ள சொத்துகள் விவரம் தெரியவந்துள்ளது.
ரூ.4.33 கோடி மதிப்பிலான பங்குகள், ரூ.3.81 கோடி மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் பங்குகள், ரூ.26.25 லட்சம் வங்கி கையிருப்பு, ரூ.15.21 லட்சம் தங்கப் பத்திரங்கள் உள்பட ரூ.9,24,59,264 மதிப்புள்ள அசையும் சொத்துகள் தனக்கு இருப்பதாகத் தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.
மேலும் தற்போதைய மதிப்பில் ரூ.11,15,02,598 மதிப்புள்ள அசையா சொத்துகள் தனக்கு உள்ளதாக ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார். 9 கோடி ரூபாய் மதிப்பில் குருகிராமில் சொந்த அலுவலகம் உள்ளது என்றும் தனது சகோதரியுடன் இணைந்து விவசாய நிலம் உள்ளது. இந்த அசையா சொத்துகளின் மதிப்பே 11.15 கோடி என குறிப்பிட்டுள்ளார் ராகுல் காந்தி.
மேலும், தன்னிடம் கையிருப்பு ரொக்கமாக 55 ஆயிரம் ரூபாய் இருப்பதாகவும், ரூ.49 லட்சத்து 79 ஆயிரத்து 184 கடன் தனக்கு இருப்பதாகவும் ராகுல் காந்தி தனது பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார். மேலும் தன்னிடம் 333.3 கிராம் எடையுள்ள தங்க நகைகள் உள்ளதாகவும் அதன் மதிப்பு 4.20 லட்சம் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்குச் சொந்தமாக காரோ அல்லது அடுக்குமாடி குடியிருப்போ இல்லை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதே விவரங்களையே, அண்மையில் வயநாடு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தபோதும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications