உத்தரப் பிரதேசத்தில் சமூக நீதிக்குரல்! பாரத் ஜடோ யாத்திரையில் முழங்கிய ராகுல், பிரியங்கா காந்தி
லக்னோ: ராகுல் காந்தியின் பாரத் ஜடோ நியாய யாத்திரை தற்போது உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி பேசியிருந்தது பெரும் கவனம் பெற்றிருக்கிறது.
லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இம்மாநிலத்தில் முதன் முறையாக இந்தியா கூட்டணி சார்பில் தொகுதி பங்கீடு சமீபத்தில் இறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று உ.பியின் மொதாராபாத்தில் நடைபெற்ற பாரத் ஜடோ நியாய யாத்திரையில் அண்ணன் ராகுலுடன், தங்கை பிரியங்கா காந்தி கைகோர்த்திருக்கிறார். இந்த யாத்திரையில் ராகுல் பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

1990 இறுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைப்படி, மத்திய அரசு வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால், மண்டல் கமிஷன் அறிக்கையை விமர்சித்து ராஜீவ் காந்தி பேசிய விஷயங்கள் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவாகவே பார்க்கப்பட்டு வந்தது. இப்படி இருக்கையில்தான் தற்போது நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன. இதே கோரிக்கையை ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தி எதிரொலிக்க தொடங்கியுள்ளார்.
இன்று உத்தரப் பிரதேசத்தில் பேசிய அவர், "இந்த நாட்டில் 50% பிற்படுத்தப்பட்டோர், 15% சிறுபான்மையினர், 15% தலித் மற்றும் 8% பழங்குடியினர் உள்ளனர். ஆனால் இவர்களில் எத்தனை பேர் கவுரவமான வேலைகளில் இருக்கின்றனர்? 100 நாள் வேலையில் இந்த மக்கள் அதிக அளவில் பார்க்க முடிகிறது. ஆனால் ஏன் பெரு நிறுவனங்களில் இவர்களை பார்க்க முடியவில்லை? இவர்களை எது தடுக்கிறது? இவர்களின் வளர்ச்சி குறித்து பேசாத பிரதமர் மோடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக் என மேஜிக் ஷோக்களை நடத்திக்கொண்டிருக்கிறார்.
வேலையின்மை, கல்வியின்மை, வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் போன்றவற்றிலிருந்து மக்களை பிரதமர் திறமையாக திசை திருப்பி வருகிறார். உண்மையான தேச பக்தர்கள் நாட்டை ஒருங்கிணைக்கவே முயல்வார்கள். அதை சிதைக்க மாட்டார்கள்" என்று விமர்சித்திருந்தார்.
ராகுலை தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, "உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் போலீஸ் காண்ஸ்டபிளுக்கான தேர்வு நடைபெற்றது. இதில் சுமார் 28 லட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்தார்கள். ஆனால் கடைசியில் என்ன நடந்தது? வினாத்தாள் லீக் ஆகிவிட்டது. 28 லட்சம் இளைஞர்களின் வாழ்க்கைக்கு இந்த தேர்வு பதிலளிக்கவில்லை. இப்போது தேர்வை முழுமையாக ரத்து செய்துள்ளதாக யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு அறிவித்திருக்கிறது. அப்படியெனில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார்? அவர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? என்பதை ஏன் பாஜக அரசு வெளிப்படையாக கூறவில்லை? என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் கடந்த 16ம் தேதி பாரத் ஜடோ யாத்திரை நுழைந்தது. அப்போதே பிரியங்கா காந்தி இதில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உடல்நலக்குறைவு காரணங்களால் அவர் யாத்திரையில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து முதன் முறையாக இன்று பங்கேற்றிருக்கிறார். யாத்திரை உத்தரப் பிரதேசத்திலிருந்து வெளியேறும் வரை, பிரியங்கா காந்தி யாத்திரையில் இருப்பார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications