‛பெண்களுக்கு ரூ.100’.. அமித்ஷாவுக்காக கூட்டம் சேர்த்த பாஜகவினர்! கேள்வி கேட்ட நிருபர் மீது ‛அட்டாக்’
லக்னோ: ரேபரேலி லோக்சபா தொகுதியில் கேள்விக்கேட்ட பத்திரிகையாளரிடம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பிரசாரத்துக்கு ரூ.100 கொடுத்து அழைத்து வரப்பட்டதாக பெண்கள் தெரிவித்தனர். இதனால் கோபமான பாஜகவினர் பத்திரிகையாளரை பிடித்து தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ வேகமாக பரவி வருகிறது.
உத்தர பிரதேச மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதில் ஒன்று தான் ரேபரேலி. இது காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய தொகுதியாகும். 2019 தேர்தலில் சோனியா காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது அவர் ராஜ்யசபா எம்பியாகி உள்ளார்.

இதனால் ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். ராகுல் காந்தி ஏற்கனவே கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ள நிலையில் ரேபரேலியில் 2வது தொகுதியாக களமிறங்கி உள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்டு சோனியா காந்தியிடம் தோற்றார். தற்போது அவர் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக வேட்பாளராக மீண்டும் ரேபரேலியில் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதிக்கு மே 20ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தான் காங்கிரஸ், பாஜக தலைவர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பாஜக வேட்பாளர் தினேஷ் பிரதாப் சிங்கை ஆதரித்து அமித்ஷா ரேபரேலியில் பிரசாரம் செய்தார். அப்போது பாஜகவினர் ஏராளமானவர்கள் பங்கேற்றனர். இந்த சமயத்தில் ஆன்லைன் ஊடகத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர் ராகவ் திரிவேதி அங்கு குவிந்திருந்த பெண்களிடம் உரையாடல் நிகழ்த்தி வீடியோ பதிவு செய்தார்.

இந்த வேளையில் சில பெண்கள், ‛‛ரூ.100 தந்து பிரசாரத்துக்கு அழைத்து வந்தனர். எங்களுக்கு ஷா (அமித்ஷா) என்றால் யார் என்று தெரியாது'' என்றனர். இதற்கிடையே அங்கு வந்த பாஜகவினர் பத்திரிகையாளர் ராகவ் திரிவேதியை தனியே அழைத்து சென்று வீடியோவை டெலிட் செய்யும்படி கூறியுள்ளனர். ஆனால் அவர் மறுத்துள்ளார். இதையடுத்து ராகவ் திரிவேதியை பாஜகவினர் தாக்கி உள்ளனர். இதில் அவர் மயங்கியுள்ளார்.

இதையடுத்து அவர் கண்விழித்து பார்த்தபோது மருத்துவமனையில் இருந்துள்ளார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுபற்றி ராகவ் திரிவேதி சார்பில் அவரது கேமராமேன் சன்ஜித் சனி போலீசில் புகார் செய்தார். இந்த புகாரை தொடர்ந்து 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications