அடுத்த ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல்.. முதல்வர் வேட்பாளராகிறாரா பிரியங்கா காந்தி?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் தலைமையின் கீழ் காங்கிரஸ் போட்டியிடும் என முன்னாள் அமைச்சரும் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை பாஜகவை பின்னுக்கு தள்ளிவிட்டு ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதி, பிஎஸ்பி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றன.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, தலித் பெண்கள் பாலியல் பலாத்காரம், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் உள்ளிட்டவை எதிரொலிக்கும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த தேர்தல் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித் செய்தியாளர்களை சந்தித்தார்.

காங்கிரஸ் கட்சி
அவர் கூறுகையில் வரும் உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காது. யாரேனும் எங்களுடன் கூட்டணி அமைக்க விரும்பினால், அவர்களை வரவேற்கிறோம் என்றார். முதல்வர் வேட்பாளர் குறித்து கேட்டதற்கு சல்மான் குர்ஷித் கூறுகையில் உத்தரப்பிரதேச தேர்தலை பிரியங்கா காந்தியின் தலைமையின் கீழ் சந்திப்போம்.

கடும் உழைப்பு
அவர் கட்சியின வெற்றிக்காக கடுமையாக உழைத்து வருகிறார். அவரே முதல்வர் வேட்பாளர் யார் என்பதையும் அறிவிப்பார். நாங்கள் உ.பி. மாநில மக்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறோம். அவர்களுடைய கோரிக்கைகள், எதிர்பார்ப்புகளை வைத்து தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும். அதாவது சாமானிய மக்களின் குரலாக எங்கள் தேர்தல் அறிக்கை ஒலிக்கும்.

முக்கிய பிரச்சினை
விவசாயிகள், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்டவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. இவற்றின் மீது கவனம் செலுத்துவோம். இன்றைய தினமும் ஆக்ராவில் மக்களை சந்தித்தோம். அவர்களுடைய பிரச்சினைகளை பேசினோம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் சுகாதார கட்டமைப்பு சரியாக இல்லை. எனவே தேர்தல் அறிக்கையில் சுகாதாரத் துறை குறித்தும் கவனத்தில் கொள்ளப்படும்.

கல்வித் துறை
கொரோனா தொற்றின் காலத்தில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சுகாதார துறை எந்த அளவுக்கு இருந்தது என்ற உண்மை அனைவருக்குமே புலப்பட்டது. அது போல் கல்வித் துறையையும் வலுப்படுத்திய வேண்டிய தேவை இருக்கிறது என்றார். கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக 312 இடங்களில் அபார வெற்றி பெற்றது. மொத்தம் 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உ.பியில் பாஜகவின் வாக்கு சதவீதம் 39.67 சதவீதமாக இருந்தது. சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களிலும் வென்றது. கடந்த அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறவே இல்லை. தற்போது 32 ஆண்டுகள் கழித்தாவது காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. மேலும் முதல்வர் வேட்பாளரை பிரியங்கா காந்திதான் அறிவிப்பார் என மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார். எனவே முதல்வர் வேட்பாளராக நல்ல, மக்களறிந்த ஒரு வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும் என தெரிகிறது. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி பிரியங்கா காந்தியை கூட முதல்வர் வேட்பாளராக நிறுத்த கட்சி தலைமையிடம் பேசலாம் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications