கேஸ் சிலிண்டர் வந்தது எப்படி? ‘மர்மம்’.. லக்னோவில் புறப்படும்போது இல்லையாம்.. ரயில்வே அதிகாரி தகவல்!
லக்னோ: மதுரையில் சுற்றுலா ரயிலில் தீப்பற்றி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியான நிலையில், இந்த தீ விபத்துக்கு காரணம் கேஸ் சிலிண்டர் தான் என தெரியவந்தது. ஆனால், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் லக்னோவில் அந்த சுற்றுலா பயணிகள் ரயிலில் ஏறும்போது கேஸ் சிலிண்டர் எதுவும் இல்லை என லக்னோ ரயில்வே பாதுகாப்பு அதிகாரி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 65 பேர் கொண்ட குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரம், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்க்க சுற்றுலா ரயிலில் கடந்த வாரம் புறப்பட்டனர். தங்களுடன் இரு சமையல் கலைஞர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் 3 பெட்டிகளில் பயணித்தனர்.

இந்தப் பெட்டி லக்னோ - ராமேஸ்வரம் செல்லும் ரயில்களில் கடைசியாக இணைக்கப்பட்டு ஆங்காங்கே செல்லும். அந்த வகையில் நேற்று நாகர்கோவிலில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலை 3.48 மணிக்கு புனலூர் வந்தனர். அங்கு ரயில் நிலையத்தில் இவர்களுடைய இணைப்பு ரயிலுக்காக காத்திருந்தனர். அப்போது ஒரு பெட்டியில் திடீரென தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த ரயில்வே போலீசார் தீயணைப்பு துறையினர் என சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து தண்ணீர் பீய்ச்சி அடித்துப் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 10 பேர் தீயில் கருகி உயிரிழந்துவிட்டனர். அவர்களுடைய உடல்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு முக்கிய காரணமே சமையல் எரிவாயு சிலிண்டர் தான் எனத் தெரியவந்துள்ளது. அதிகாலையில் 3.48 மணிக்கு மதுரை ஜங்ஷனை ஒட்டியுள்ள புனலூருக்கு இந்த ரயில் பெட்டி வந்ததாகவும் இணைப்பு பெட்டிக்காக காத்திருந்த போது டீ குடிக்க சமையல் எரிவாயு சிலிண்டரை இணைத்து அடுப்ப பற்ற வைத்த போது அதிலிருந்து கேஸ் லீக்காகி தீப்பிடித்து எரிந்ததாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில்களில் கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லவோ பயன்படுத்தவோ அனுமதி இல்லை. அப்படி இருக்கும்போது, இந்த ரயில் பெட்டியில் கேஸ் சிலிண்டர் வந்தது எப்படி என்பது தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், லக்னோ பிரிவு ரயில்வே பாதுகாப்புப் படையின் மூத்த அதிகாரி ஒருவர் அளித்துள்ள பேட்டியில், "லக்னோவில் இருந்து சென்ற ரயிலில் சிலிண்டரில் இருந்து பரவிய தீ பிடித்தே விபத்து நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது. நாங்கள் ஆகஸ்ட் 17-ஆம் தேதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். லக்னோ ஜங்ஷனில் இருந்து ஆகஸ்ட் 17 அன்று சம்பந்தப்பட்ட பெட்டி புறப்பட்டபோது அதில் சிலிண்டர் போன்ற தீப்பற்றக்கூடிய பொருட்கள் எதுவும் இல்லை.
63 பயணிகள் அந்தப் பெட்டியில் இருந்தனர். அதில் சம்பந்தப்பட்ட குழுவினர் சிலிண்டர் எடுத்துச் சென்றதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. எங்களது குழுவினர் எப்போதுமே ரயிலில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதை தீவிரமாகக் கண்காணிப்பார்கள். அப்படி ஏதும் இருந்திருந்தால் நிச்சயம் கைப்பற்றப்பட்டிருக்கும். அப்படி இருக்கும்போது, அந்த ரயிலில் சிலிண்டர் எடுத்துச் செல்லப்பட்டது எப்படி என்பது பற்றி விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
லக்னோவில் அந்த சுற்றுலா பயணிகள் ஏறும்போது கேஸ் சிலிண்டர் எடுத்து வந்ததாக சிசிடிவி காட்சியில் பதிவாகவில்லை என்றும், தாங்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை தீவிரமாக கண்காணிப்போம் என்றும் லக்னோ அதிகாரி கூறியுள்ளார். அப்படியென்றால், வரும் வழியில் வேறு எங்கிருந்தும் சிலிண்டர் ஏற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ரயில்வே போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளதால் விரைவில் என்ன நடந்தது எனத் தெரியவரும்.












Click it and Unblock the Notifications