இந்தியாவுக்கு மதச்சார்பின்மை மிகப் பெரிய அச்சுறுத்தல்- சொல்வது உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: உலகமயமாக்கல் சூழலில் மதச்சார்பின்மை என்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
லக்னோவில் ராமாயணம் தொடர்பான என்சைக்ளோபீடியா வெளியீட்டு நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
பணத்துக்காக சிலர் நாட்டுக்கு துரோகம் இழைக்கின்றனர். இந்தியா பற்றி உலக அரங்கில் தவறுதலான கற்பிதங்களை உருவாக்குகின்றனர். வரலாற்று உண்மைகளை யாரும் எப்போதும் மறுத்துவிட முடியாது.
உலக அரங்கில் இந்தியாவின் கலாசாரம் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் மதச்சார்பின்மை பேசுவது என்பது இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். இந்து கலாசாரம் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அங்கோவார்ட் கோவிலில் இருக்கும் புத்த மதத்தை சேர்ந்த வழிகாட்டி, இந்து மதத்தில் இருந்துதான் புத்த மதம் உருவானது என்கிறார். ராமாயணமும் மகாபாரதமும் நமக்கு வாழ்வியல் பாடங்களை மட்டுமே கற்றுத்தரவில்லை.
இந்தியாவின் பரந்து விரிந்த எல்லைகளை பற்றியும் விவரிக்கின்றன. 1947-க்கு முன்னர் வரை இந்தியாவுடன் இணைந்திருந்தது பாகிஸ்தான். இந்தியாவின் 7 புனித நகரங்களில் அயோத்தி, மதுரா, காசி ஆகியவை உத்தரப்பிரதேசத்தில் இருப்பது நமக்கு பெருமை. இவ்வாறு யோகி ஆதித்யநாத் கூறினார்,