ராமர் கோவில் கட்டவில்லை எனில் மோடியால் இனி ஆள முடியாது.. அயோத்தியில் சிவசேனா பூஜை!
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்படி கோரிக்கை வைத்து, சிவசேனா அமைப்பு சராயு நதிக்கரையில் பூஜை செய்தது.
லக்னோ: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும்படி கோரிக்கை வைத்து, சிவசேனா அமைப்பு சராயு நதிக்கரையில் பூஜை செய்தது. இதில் சிவசேனா தலைவர் உத்தக் தாக்கரே பாஜகவிற்கு எதிராக கடுமையான கருத்துக்களை வைத்தார்.
உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் பிரச்சனை மீண்டும் விவாதம் ஆகியுள்ளது. இந்த முறை பாஜகவிற்கு பதிலாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பும், சிவசேனா அமைப்பும் ராமர் கோவில் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது.
அயோத்தி - ஜென்மபூமி வழக்கு விசாரணை தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் ராமர் கோவில் விவகாரம் உச்சம் அடைந்து இருக்கிறது.
இரண்டு நடந்தது
உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் தொடர்பாக இரண்டு விழாக்கள் இன்று நடந்தது. ஒன்று விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு நடத்திய தர்ம சன்சாட் என்று நிகழ்வு. இன்னொன்று சிவசேனா அமைப்பு நடத்திய ராமர் வழிபாடு நிகழ்வு.
கவனம் ஈர்த்தது
இதில் சிவசேனா சார்பாக நடத்தப்பட்ட வழிபாட்டு பண்டிகை பெரிய கவனம் ஈர்த்தது. சிவசேனாவின் உத்தக் தாக்கரே தலைமையில் இந்த வழிபாட்டு பண்டிகை நடத்தப்பட்டது. அயோத்தியில் சராயு நதிக்கரையில் இந்த பூஜை பெரிய அளவில் நடத்தப்பட்டது.
பலர் கலந்து கொண்டனர்
இதில் மொத்தம் 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக சிவசேனா அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வழிபாட்டு நிகழ்வு ராமர் கோவிலை விட பாஜகவிற்கு எதிராக நடந்த பிரச்சாரம் போலத்தான் நடந்தது.
கடும் எதிர்ப்பு
இதில் உத்தவ் தாக்கரே பாஜகவிற்கு எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்தார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது மட்டுமே பாஜகவிற்கு ஒரே வேலை. அதை செய்யவில்லை என்றால் பாஜக ஆட்சியில் நீடிக்க முடியாது. ராமர் கோவில்தான் இப்போது முக்கியம், இல்லையென்றால் மோடியால் இனி ஆட்சியை பிடிக்க முடியாது என்று கோபமாக கருத்து தெரிவித்தார்.