சட்டசபை தேர்தலில் போட்டி இல்லை- அகிலேஷ் அறிவிப்பால் அதிர்ச்சியில் உறைந்த சமாஜ்வாதி நிர்வாகிகள்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவது இல்லை என்று அகிலேஷ் யாதவ் அறிவித்திருப்பது அக்கட்சியினரை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக அரசு ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியோ எப்படியும் அடுத்தது நமது ஆட்சிதான் என நம்பிக்கையுடன் இருக்கிறது.
காங்கிரஸும் பகுஜன் சமாஜ் கட்சியும் கணிசமான அல்லது கவுரவமான இடங்கள் கிடைத்தால் போதும் என போராடுகிறது. இம்மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் பணிகளில் படுதீவிரமாக உள்ளன.

போட்டி இல்லை- அகிலேஷ்
அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இரு கட்சிகளிடையேயான தொகுதி பங்கீடு விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அகிலேஷ் யாதவ் தாம் சட்டசபை தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என அதிர்ச்சி தகவலை அறிவித்தார்.

சமாஜ்வாதி தொண்டர்கள் அதிர்ச்சி
அகிலேஷ் யாதவின் இந்த அறிவிப்பு சமாஜ்வாதி கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அகிலேஷ் யாதவ் முதல்வர் வேட்பாளர் என அறிவித்து அக்கட்சியினர் பிரசாரம் செய்து வரும் நிலையில் அவர் தேர்தலில் போட்டியிடப் போவது இல்லை என அறிவித்திருப்பது நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சோர்வடைய செய்துள்ளது. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவ் இதுவரை சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதும் இல்லை என்பதையும் பார்க்க வேண்டும்.

போட்டியிடாத முதல்வர்கள்
இப்போதும் லோக்சபா எம்.பி.யாக இருக்கிறார் அகிலேஷ் யாதவ். இவர் மட்டும்தான் என்றில்லை தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் சரி மாஜி முதல்வர் மாயாவதியும் சரி சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் எம்.எல்.சியாக மட்டும் இருந்து முதல்வராக பதவி வகித்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமாஜ்வாதி கட்சி முடிவெடுக்கும்
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ராஜேந்திர சவுத்ரி, இது தொடர்பாக எங்களிடம் அகிலேஷ் யாதவ் ஆலோசனை நடத்தவில்லை. அகிலேஷ் என்னதான் சொல்லி இருந்தாலும் கட்சிதான் இறுதி முடிவெடுக்கும். அதனால் தொண்டர்கள், நிர்வாகிகள் குழப்பம் அடைய தேவை இல்லை. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை விரைவில் இறுதி செய்து அறிவிப்போம் என்றார்.












Click it and Unblock the Notifications