துண்டான கையை தூக்கிக்கொண்டு ஓடிய தெருநாய்! உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மருத்துவமனையில் பரபரப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தெருநாய் ஒன்று துண்டிக்கப்பட்ட மனிதனின் கையை, கவ்விக்கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுற்றி வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் தலைநகர் லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனை பல்கலைக்கழக வளாகத்தில், இன்று காலை தெருநாய் ஒன்று வாயில் மனிதனின் கையை கவ்விக்கொண்டு திரிந்துகொண்டிருந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் அச்சத்தில் அலறி ஓடியுள்ளனர். சிலர் நாளை துரத்தியுள்ளனர். கையை தூக்கிக்கொண்டு ஓட முடியாத நாய், அதை கீழே போட்டுவிட்டு சென்றிருக்கிறது.

இதனையடுத்து நாய் கவ்விக்கொண்டு ஓடிய கை யாருடையது? என கேள்வி எழுந்திருக்கிறது. நாய் விட்டுச்சென்ற கையை மீட்க வேண்டும் என மருத்துவமனை தரப்பிடம் பொதுமக்கள் சிலர் கேட்டுக்கொண்டனர். ஆனால், நீண்ட நேரமாக கை மீட்கப்படாமல் ரோட்டின் ஓரத்தில்தான் கிடந்திருக்கிறது. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் கை மீட்டு கொண்டு சென்றிருக்கின்றனர்.
மருத்துவமனையிலிருந்து உடல் கழிவுகள் சரியான முறையில் அப்புறப்படுத்தப்படாமல், குப்பை தொட்டிகளிலேயே வீசிவிடுவதாக உள்ளூர் மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். எனவே குப்பை தொட்டியிலிருந்து நாய், மனித கையை கொண்டு வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து தனியார் மருத்துவமனை நிர்வாகம் விசாரணையை தொடங்கியிருக்கிறது.
நிர்வாகம் தரப்பில் கூறுகையில், “எங்கள் ஊழியர்கள் தெரு நாளை பிடித்து கையை மீட்டிருக்கின்றனர். இது யாருடையது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேநேரம் கையை, போலீசிடம் ஒப்படைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். எங்களுக்கு தெரிந்த வரை, நாய் மனித கையை வெளியில் எங்கோ இருந்து மருத்துவமனைக்கு கொண்டு வந்திருக்கிறது. சரியான முறையில் மனித கழிவுகளை அப்புறப்படுத்தாமல் இருந்த பகுதியிலிருந்து இந்த கை கிடைத்திருக்கலாம். எங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை” என்று கூறியுள்ளார்.
கொலை செய்யப்பட்ட இடத்திலிருந்து கூட, தெரு நாய் ஒன்று மனிதனின் கையை கவ்விக்கொண்டு வந்திருக்கலாம் என சிலர் சந்தேகம் தெரிவித்திருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே உத்தரப் பிரதேசத்தின் பொது சுகாதாரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் மருத்துவக் கல்லூரியை கட்டும் பணியை பாஜக அரசு கடந்த ஆண்டுதான் தொடங்கியது. ஆனால் தென் மாநிலங்களில் ஏறத்தாழ அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக்கல்லூரி நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இதையெல்லாம் ஒப்பிட்டு, உ.பி அரசு மீது நெட்டிசன்கள் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மறுபுறம், எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு உத்தரப் பிரதேசத்தைதான் ரோல் மாடலாக காட்ட பாஜக திட்டமிட்டிருக்கிறது. இப்படி இருக்கையில்தான் மனித கையை தெருநாய் தூக்கிக்கொண்டு ஓடியுள்ள சம்பவம் நடந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications