மற்ற மாணவர்களை வைத்து இஸ்லாமிய மாணவனை அடிக்க சொன்ன ஆசிரியை.. ராகுல் காந்தி கண்டனம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த 7 வயது மாணவனை, மற்ற மாணவர்களை வைத்து ஆசிரியர் ஒருவர் அடிக்க செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு நடந்து வருகிறது. குஜராத்துக்கு அடுத்தபடியாக இந்த மாநிலத்தைதான் பாஜகவினர் இந்தியாவின் ரோல் மாடல் என்று கூறி வருகின்றனர். ஆனால், இம்மாநிலத்தில் தொடர்ந்து சாதிய, மத மோதல் சம்பங்கள் நடைபெற்று வருவதாகவும், இதனால் தலித், இஸ்லாமிய சமூத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளை மெய்ப்பிக்கும் வகையில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது.

அதாவது, முசாஃபர்நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றின் ஆசிரியை வகுப்பறையில் 7 வயது இஸ்லாமிய மாணவனை சக மாணவர்களை வைத்து வரிசையாக அடிக்கச் செய்துள்ளார். இந்த சம்பவத்தை செய்ய சில மாணவர்கள் தயங்கியுள்ளனர். ஆனாலும் விடாத ஆசிரியை அந்த மாணவர்களை கட்டாயப்படுத்தி அடிக்கச் செய்திருக்கிறார். மட்டுமல்லாது சிறுவனின் மதத்தை குறிப்பிட்டும் பேசியிருக்கிறார். இது அனைத்தும் வீடியோவாக பதிவான நிலையில், இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகிறது.
சம்பவம் பெரும் பிரச்னையாக வெடித்த நிலையில், பள்ளி நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் விளக்கம் கேட்டிருக்கின்றனர். இது தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டியில், "இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சமரச பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறது. அவர்கள் எங்கள் மகனின் கல்வி கட்டணத்தை ரிட்டன் செய்துள்ளனர். எனவே நான் பள்ளி மீது குற்றம் சுமத்த விரும்பவில்லை. ஆனால் நான் மீண்டும் என் மகனை இந்த பள்ளியில் சேர்க்க மாட்டேன்" என்று கூறியுள்ளார்.
ஆசிரியரின் இந்த செயல் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சத்யநாராயண் பிரஜாபத் கூறியுள்ளார். அதேபோல ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாக குழந்தை உரிமைகள் அமைப்பு கூறியுள்ளது. இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அதாவது, "அப்பாவி குழந்தைகளின் மனதில் பாகுபாடு என்ற விஷத்தை விதைத்து, பள்ளி போன்ற புனிதமான இடத்தை வெறுப்பின் சந்தையாக மாற்றுவது மிகவும் மோசமான செயலாம். ஒரு ஆசிரியரால் நாட்டிற்கு இதைவிட மோசமாக எதையும் செய்துவிட முடியாது. இதே கொடிய எண்ணத்தைதான் பாஜகவின் மண்ணெண்ணெய் போல நாடு முழுவதும் பரப்பி தீக்கரையாக்கி வருகின்றனர். குழந்தைகள் இந்தியாவின் எதிர்காலம் - அவர்களை வெறுக்காதீர்கள், நாம் அனைவரும் சேர்ந்து அன்பை கற்பிக்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications