உ.பி-இல் கொரோனாவால் உயிரிழந்த தாய்லாந்து பெண்.. இறுதி சடங்கு குடும்பத்தினருக்கு நேரடியாக ஒளிபரப்பு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த தாய்லாந்து பெண் குறித்து சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில், அவரது இறுதிச் சடங்கு தாய்லாந்திலுள்ள குடும்பத்தினருக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
நாட்டில் தற்போது கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. டெல்லி, உத்தரப் பிரதேசம் என அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு... என்ன கட்டுப்பாடுகள்? யாருக்கெல்லாம் அனுமதி? முழு விவரம்
உத்தரப் பிரதேசத்தில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 41 வயது பெண்ணுக்குக் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டது.
தாய்லாந்து பெண் உயிரிழப்பு
இதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது தாய்லாந்தில் இருந்த அந்தப் பெண் எதற்காக இந்தியா வந்தார் என்பது குறித்து லக்னோ போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கட்சிகள் குற்றச்சாட்டு
இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் பாஜக எம்.பி. சஞ்சய் சேத்தின் மகன் தான் அந்த தாய்லாந்து பெண்ணை அழைத்து வந்தார் என்றும் இது குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதை முற்றிலுமாக மறுத்த பாஜக எம்.பி. சஞ்சய் சேத், தனது மகனின் பெயர் எப்படி இதில் வந்தது என விசாரிக்க வேண்டும் என போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சுற்றுலா வழிகாட்டு மறுப்பு
ஆனால் இந்தத் தகவல்களை அந்த தாய்லாந்து பெண்ணின் சுற்றுலா வழிகாட்டியாக இருந்த சல்மான் கான் என்பவர் இந்தத் தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார். அவருக்கு டெல்லியில் சிகிச்சை அளிக்க குடும்பத்தினர் விரும்பியதாகவும் இருப்பினும் ஆக்சிஜன் அளவு குறைவாக இருந்ததால், அவரை லக்னோ மருத்துவமனை அனுப்ப மறுத்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இறுதிச் சடங்கு
தாய்லாந்து பெண் உயிரிழந்தது குறித்து தாய்லாந்து தூதரகம் மூலம் அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணின் இறுதிச் சடங்கு உத்தரப் பிரதேசத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு தாய்லாந்திலுள்ள குடும்பத்தினருக்கு நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பெண்ணின் சாம்பலும் இறப்பு சான்றிதழும் தாய்லாந்து நாட்டிற்கு அனுப்பப்படும் என உத்தரப் பிரதேச போலீசார் தெரிவித்தனர்.