நெருங்குதே தேர்தல்.. 2 குறிக்கோள்கள்.. மெகா திட்டங்கள்.. 'மாற்றத்தை' நோக்கி நகரும் யோகியின் உ.பி அரசு
லக்னோ: ராமர் கோயில் கட்டுவது, புனித யாத்திரிகளுக்கான தலைநகரமாக மாநிலத்தை மாற்றுவது உத்தரப் பிரதேசத்தை வேற லெவலில் கட்டமைக்க தொடங்கியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் பதவியேற்று இன்றுடன் 6 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தை 10 முக்கிய துறைகளில் முதன்மையான மாநிலமாக மாற்ற வேண்டும் என்று பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முழு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்று பாஜக முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனை சாத்தியமாக்க தற்போது பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.

ஏற்கனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் லக்னோவில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வடமாநிலங்களின் கவனத்தை உத்தரப் பிரதேசத்தை நோக்கி திருப்பியது. மேலும், பட்ஜெட்டில் பல அதிரடியான திட்டங்களை அறிவித்து என யோகி ஆதித்யநாத் அரசு மாஸ் காட்ட தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக யோகி ஆதித்யநாத்தின் 6 ஆண்டுக்கால ஆட்சியை பாஜக கொண்டாடி வருகிறது. பாஜகவின் டபுள் என்ஜின் அரசை மக்களிடம் கொண்டு சேர்க்க இந்த கொண்டாட்டத்தை பாஜக பயன்படுத்தியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சிகளை நடத்துவது, விளையாட்டு போட்டிகள், வேலை வாய்ப்பு முகாம்கள், பணி நியமன ஆணைகள் என பாஜக அம்மாநிலத்தையே கலகலப்பாக்கியுள்ளது.
தற்போது இரண்டு குறிக்கோள்களை இம்மாநில அரசு கையில் எடுத்திருக்கிறது. ஒன்று ராமர் கோயில் கட்டுவது. இரண்டாவது மத சுற்றுலாத்தலங்களின் தலைநகரமாக உத்தரப் பிரதேசத்தை மாற்றுவது. இது தவிர 10 முக்கிய விஷயங்களில் பாஜக கவனம் செலுத்தி வருகிறது. அதாவது, 'சட்டம் ஒழுங்கு, விவசாய உற்பத்தி, சமூகப் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் தொழில், நகர்ப்புற வளர்ச்சி, கிராமப்புற மேம்பாடு, மருத்துவம் மற்றும் சுகாதாரம், கல்வி, சுற்றுலா மற்றும் குறுகிய கால மற்றும் நீண்ட கால இலக்குகள்' போன்றவற்றில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தை மற்ற மாநிலங்களிகளுக்கு முன்னோடியாக மாற்ற பாஜக அரசு முயன்று வருகிறது.
கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சிதான் நடைபெற்று வந்திருந்ததாகவும், தற்போதுதான் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறதாகவும் உ.பி பாஜக தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளது. பாஜக பொறுப்பேற்ற இந்த 6 ஆண்டுகளில் 63,055 குற்றவாளிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழும், 836 பேர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாக பாஜக அரசு கூறியுள்ளது. குண்டர் சட்டத்தின் கீழ் மட்டும் சுமார் ரூ.9022 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கடந்த 6 ஆண்டுகளில் குதம் புத் நகர், லக்னோ, ஆக்ரா, கான்பூர், வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் காசியாபாத் உள்ளிட்ட ஏழு நகரங்களில் நிலவிய சட்டம் ஒழுங்கு பிரச்னை கறாரான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நகரங்களில் போலீஸ் கமிஷனரேட் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications