ஸ்ட்ரைட்டா ராகுலை "குறி" வைத்த பிரசாந்த் கிஷோர்.. இதெல்லாம் "கதர்" கட்சிக்கு தேவையா.. செம அட்டாக்
ராகுல்காந்தியை விமர்சித்து பிரசாந்த் கிஷோர் ட்விட் பதிவிட்டுள்ளார்
லக்னோ: "இந்த 10 வருஷமாக நடந்து முடிந்த தேர்தல்களில், 90 சதவீத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி, இந்த காங்கிரஸ் தலைவர் பதவி என்பது எந்த தனிப்பட்ட நபருக்கும் உரிமையானதல்ல" என்று பிரஷாந்த் கிஷோர் தெரிவித்துள்ளதுடன், மறைமுகமாக ராகுலையும் விமர்சித்துள்ளார்.
கடந்த 2 வருடத்துக்கும் மேலாகவே, காங்கிரஸ் பொறுப்பை ஏற்காமல் ராகுல்காந்தி ஒதுங்கி வருகிறார்.. மூத்த தலைவர்கள் உச்சக்கட்ட கடுப்பில் இருக்கிறார்கள்..
சோனியாவுக்கும் உடம்பு சரியில்லை.. ஒரு தேசிய கட்சி 3 வருஷமாக தலைவரே இல்லாமல் இயங்கி கொண்டிருப்பது தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது.. இன்னொரு பக்கம் இது பாஜகவுக்கு தெம்பை தந்து வருகிறது.
பாஜகவை அசைக்கவே முடியாதுன்னு சொன்ன பிரசாந்த் கிஷோருக்கு பொளேர் பதிலடி தந்த இடைத்தேர்தல் முடிவுகள்!
மம்தா
இப்படிப்பட்ட சூழலில்தான், 2024-ம் ஆண்டில் நடக்க போகும் எம்பி தேர்தலுக்கு இப்போதே தேசிய அரசியல் தயாராகி வருகிறது.. அந்த தேர்தலை கணக்கு செய்து, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வேலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கடந்த 6 மாதங்களாகவே ஈடுபட்டு வருகிறார்.
சந்திப்பு
இதற்காக பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேசிவருகிறார்.. ஆனால், மத்தியில் அமையும் எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை ஏற்பதை மம்தா விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகி வந்தன.. அதற்கேற்றார் போல், ஏற்கெனவே டெல்லி சென்றிருந்த மம்தா, பல தலைவர்களை சந்தித்தாரே தவிர, சோனியா காந்தியை சந்திக்கவில்லை..
சோனியா
இதை பற்றி செய்தியாளர்கள் அப்போது கேட்டதற்கு, ஒவ்வொரு முறை டெல்லி வரும்போதெல்லாம் சோனியா காந்தியைச் சந்திக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டத்தில் இல்லையே என்றார். அதுமட்டுமல்ல, எப்போது பார்த்தாலும் ராகுல் காந்தி வெளிநாட்டிலேயே தங்கியிருக்க முடியாது என்றும் நேரடியாகவே விமர்சித்திருந்தார். எனவே, அப்போதே காங்கிரஸை மம்தா, ஓரங்கட்ட நினைத்துவிட்டதாகவும் கருதப்பட்டது..
சீனியர்
இதைதவிர, காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் உள்ளவர்களையும் தங்கள் கட்சி பக்கம் இழுக்கும் முயற்சியிலும் மம்தா தற்போது மும்முரமாகி வருகிறார்.. அதன்படியே அஸ்ஸாம், கோவா மாநிலங்களில், பல சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் மம்தா கட்சியில் இணைந்து கொண்டிருக்கிறார்கள்.. இனி காங்கிரஸை நம்பினால் வேலைக்கு ஆகாது என்று நினைத்துவிட்டாரோ என்னவோ, தானோ நேரடியாகவே பாஜகவிடன் மோத முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதற்கு பிரசாந்த் கிஷோரும் உதவியாக இருந்து வருகிறார்.. மம்தா செல்லுமிடமெல்லாம் பிகேவும் சென்று கொண்டிருக்கிறார்.
தலைவர்
இப்படிப்பட்ட சூழலில்தான் ராகுலை, பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார்.. கட்சி தலைமை பொறுப்பையும் ஏற்று கொள்ளாமல், புதிய தலைவரையும் நியமிக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை தவித்து கொண்டிருப்பது பெருத்த பலவீனமாகி வருவதையே சுட்டிக் காட்டி உள்ளார்.. காங்கிரஸ் தலைவர் பதவி என்பது யாருடைய புனிதமான உரிமையும் கிடையாது என்றும் பிரஷாந்த் கிஷோர் போட்டு தாக்கி உள்ளார்..
எதிர்க்கட்சி
இது சம்பந்தமாக ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார், "ஒரு வலிமையான எதிர்க்கட்சியாக திகழ்வதற்கு தேவையான அம்சங்களை காங்கிரஸ் பெற்றிருக்க வேண்டும்... அதன் தலைமையும் ஜனநாயக ரீதியாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், கடந்த 10 வருஷமாகவே நடந்த தேர்தல்களில் 90 சதவீத தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ் என்று பதிவிட்டுள்ளார்.. ராகுல்காந்தியைதான் பிரசாந்த் கிஷோர் இப்படி மறைமுகமாக அட்டாக் செய்வதாக தெரிகிறது என்றாலும், பிரசாந்த் கிஷோர் சொல்வதும் உண்மைதானே என்ற முணுமுணுப்புகளம் ஆங்காங்கே எழுந்து வருகின்றன.
அட்டாக்
சில மாதங்களுக்கு முன்பு பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேரப்போவதாககூட தகவல்கள் வந்தன.. எப்படியும் ராகுலை தலைமை பொறுப்பை ஏற்க செய்துவிடுவார் அல்லது பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் அளவுக்கு வியூகங்களை வகுத்து தருவார் என்றெல்லாம்கூட கணிக்கப்பட்டது.. ஆனால், பிரசாந்த் கிஷோர் வருகையை ராகுல் காந்தி விரும்பவில்லை என்ற தகவல்கள் கசிந்தன.. அதனாலேயே காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் சேரவில்லை என்றும் தெரிகிறது.. அப்போது ஆரம்பித்த இந்த பாய்ச்சல்தான்.. மம்தா ஒருபக்கம் போட்டு தாக்கி கொண்டிருக்கிறார் என்றால், காங்கிரஸ் மீது பாய்ந்து வருகிறார் பிரசாந்த் கிஷோர்.