உ.பி.யில் அடுத்த கட்டத்திற்கு போன கொள்ளையர் அட்டூழியம்.. பாஜக எம்.எல்.ஏ தாய் காதை வெட்டி நகை பறிப்பு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடைப்பயிற்சி சென்றுகொண்டிருந்த பாஜக எம்.எல்.ஏவின் தாயாரை வழிமறித்த மர்ம கும்பலினர் அவர் அணிந்திருந்த தங்க கம்மலை காதோடு வெட்டி பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் குற்றச்செயல்களும் அதிகம் நடக்கும் மாநிலங்களில் ஒன்றாகவும் உள்ளது.
குற்றவாளிகளுக்கு மாநிலத்தில் இடமே கிடையாது என்று சொல்லும் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு அண்மையில் கூட அறிவுறுத்தல் விடுத்து இருந்தார்.
உத்தர பிரதேசத்தில் குற்றவாளிகளுக்கு இடமே கிடையாது.. யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்
காதுகளை வெட்டி நகைப்பறிப்பு
இந்த நிலையில், உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக எம்.எல்.ஏவின் தாயாரின் காதுகளை அறுத்து நகைப்பறிப்பில் கொள்ளை கும்பல் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர கொள்ளை சம்பவம் பற்றி போலீசார் கூறியதாவது:- உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் பிரதீப் சவுத்ரி. பாஜகவை சேர்ந்த இவர் புலந்த்ஷாஹர் சதார் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். இவரது 80 வயது தாயார் எப்போதும் காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
நடைப்பயிற்சி சென்ற மூதாட்டி
அந்த வகையில் இன்று காலையிலும் விஜய்நகர் காவல் நிலையப்பகுதியில் அவர் நடைப்பயிற்சி மேற்கொண்டு இருந்தார். அப்போது இவர் காதில் விலையுயர்ந்த தங்கத்திலான கம்மல் அணிந்திருந்தார். இதை அப்பகுதியில் சுற்றித்திரிந்த 2 நபர்கள் நோட்டமிட்டுள்ளனர். இந்த கம்மலை எப்படியாவது அவரிடம் இருந்து பறித்துவிட வேண்டும் என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் மக்கள் கூட்டம் சற்று குறைவான இடத்தில் மூதாட்டி வந்த போது இந்த மர்ம நபர்கள் கம்மலை பறிக்க முயன்றனர்.
காதோடு அறுத்து சென்றனர்
ஆனால் கம்மல் அவரது காதோடு இறுக்கமாக இருந்ததால் கட்டரை கொண்டு அவரது காதை துண்டாக வெட்டினர். பின்னர் வெட்டி எடுத்த காதோடு தங்க கம்மலுடன் அந்த நபர்கள் அங்கிருந்து சிட்டாக தப்பி சென்றனர். இதற்கிடையே பாதி காதினை அறுத்ததால் ரத்தம் பீறிட்டு வெளியேறியது. இதனால் மூதாட்டி வலி தாங்க முடியாமல் கதறி அழுதுள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் கூடினர். இதையடுத்து அவர் உடனடியாக அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறோம்.'' என்றார்.
கத்தியை காட்டி மிரட்டினர்
இது தொடர்பாக அந்த மூதாட்டியின் மற்றொரு மகன் ஜீத் பால் சவுத்ரி கூறுகையில், ''தினமும் என் தாயார் அந்த பகுதியில் தான் நடைப்பயிற்சி செல்வார். இன்றும் அவர் அப்படி தான் நடைப்பயிற்சிக்காக காலையிலேயே சென்றார். டிபிஎஸ் ரவுண்டானா பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள் என் தாயாரை மறித்து நிறுத்தினர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த கம்மல்களை கேட்டனர். ஆனால் அவர் கத்தி சத்தமிட முயன்றதால், கொள்ளை நபர்கள் காதில் இருந்த கம்மல்களை பறிக்க முயன்றனர்.
போலீஸ் விசாரணை
ஆனால் அவர்களால் கழற்ற முடியாததால் கம்மலோடு அவரது காதை பாதியாக வெட்டி எடுத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டனர். இதன்பின்னர் எனது தாயின் அலறல் சத்தம் கேட்டு பலர் ஓடி வந்து அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்'' என்றார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.