ரயிலா.. சீட்டுக்கட்டுகளா? அப்படியே சரியும் பெட்டிகள்! ஒடிசா டூ உ.பி வரை விபத்திற்கு காரணம் இதுதான்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்து விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா தொடங்கி ஆந்திரா, உத்தரப் பிரதேசம் என தொடர் ரயில் விபத்துக்கள் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் இதற்கான காரணங்களாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த விவாதங்கள் ஓய்வதற்குள் தற்போது உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது.

இந்த விபத்தில் 4 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொடர் ரயில் விபத்திற்கான காரணம் என்ன? இதை எப்படி சரி செய்வது? ரயில் பயணம் மீண்டும் எப்போது பாதுகாப்பானதாக மாறும்? என பல்வேறு கேள்விகளை மக்கள் எழுப்பி வருகின்றனர். இதற்கு துறை சார்ந்தவர்கள் பதிலளித்துள்ளனர்.
காலிப்பணியிடங்கள்: உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. இதனை இயக்க லட்சக்கணக்கில் பணியாட்கள் தேவைப்படுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக சுமார் 50 ரயில்வே ஊழியர்கள் ஓய்வு பெறுகின்றனர். அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால், அப்படி செய்யப்படுவதில்லை. புதிதாக ஆட்கள் தேர்வு உடனடியாக நடப்பதில்லை.
ரயில்வே பாதுகாப்பு துறையில் மட்டும் சுமார் 1.72 லட்சம் ஊழியர்களை உடனடியாக நிரப்ப வேண்டிய தேவை இருக்கிறது. தண்டவாள பராமரிப்பு பணிக்கு 87 ஆயிரம் பேரும், ஸ்டேஷன் மாஸ்டர் 64 ஆயிரம் பேர், டிரைவர்கள் 10 ஆயிரம், சிக்னல் பராமரிப்பு பணிக்கு 15 ஆயிரம் பேர் உடனடியாக தேவைப்படுகிறார்கள்.
தொழிநுட்பம்: ரயில்வே துறையில் உள்ள மற்றொரு பிரச்னை டெக்னாலஜி. ஒவ்வொரு ஆண்டுக்கும் 200 சிக்னல்கள் பழுதாகிறது. அதில் 100தான் பராமரிக்கப்படுகிறது. இப்படியே ஆண்டுக்கு 100+100+100... என கூட்டிக்கொண்டே வந்தால் தற்போது சிக்னல் பராமரிப்புக்கு மட்டும் ரூ.7,800 கோடி தேவைப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது. மறுபுறம் சிக்னலை பராமரிக்க 10 பேர் தேவை எனில் 7 பேரை கொண்டு அந்த வேலையை செய்ய சொல்கிறார்கள்.
இருப்பதோ ஏற்கெனவே பழைய சிக்னல். இதில் ஆள் பற்றாக்குறையோடு வேலை நடந்தால் அந்த வேலை முழுமையாக இருக்காது. எனவே சரி செய்யப்பட்ட 100 சிக்னல்களிலும் அடிக்கடி கோளாறு எழும். இது ஒரு 'டைம் லூப்' மாதிரி, இதிலிருந்து வெளியே வர வேண்டும் எனில் உடனடியாக ஆட்களை எடுக்க வேண்டும்.
மூன்றாவது பிரச்னை தண்டவாளம். சென்னை-மும்பை-ஹவுரா-டெல்லி இதுதான் இந்தியன் ரயில்வேயின் தங்க நாற்கர சாலை. நாட்டின் மொத்த பாதையில் 20% தண்டவாளங்கள் இந்த வழித்தடத்தில் இருக்கிறது. ஆனால் மொத்த ரயில் போக்குவரத்தில் 55% ரயில்கள் இந்த வழியில்தான் பயணிக்கின்றன. எனவே இந்த தண்டவாளங்களை பராமரிக்க வேண்டியது மிக மிக அவசியம்.
ஒரு நாளைக்கு இந்த வழியாக 100 ரயில்கள் போக முடியும் எனில் 70 ரயில்களைதான் அனுமதிக்க வேண்டும். மீதம் 30 ரயில்கள் செல்லும் நேரத்தை பயன்படுத்தி தண்டவாளத்தை பராமரிக்க வேண்டும். இதை 'பிளாக் டைம்' என்று சொல்லுவார்கள். ஆனால் இங்கு 150 ரயில்கள் இயக்கப்படுகிறது.இப்படியே தண்டவாள பராமரிப்பை பெண்டிங் வைத்து வைத்து தற்போது 10 ஆயிரம் கி.மீ தண்டவாளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்று துறை சார்ந்த முன்னாள் அதிகாரிகள் கூறுகின்றனர். ஏறத்தாழ இதே குற்றச்சாட்டுகளை டிஆர்இயு உள்ளிட்ட ரயில்வே தொழிலாளர் தொழிற்சங்கங்கள் வைக்கின்றன.
இந்த அனைத்த பிரச்னைகளையும் சரி செய்த உடனடியாக ரயில் போக்குவரத்தை சீராக்க வேண்டுவதே உடனடி கடமையாக இருப்பதாக பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications