இது என் முன்னோரின் மண்... தேர்தல் முடிவால் உ.பியை விட்டு போகமாட்டேன்.. பிரியங்கா காந்தி உருக்கம்
லக்னோ: ‛‛உத்தர பிரதேசம் எனது முன்னோரின் மண். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும் மாநிலத்தை விட்டு வெளியே போகமாட்டேன்'' என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உருக்கமாக பேசினார்.
உத்தரபிரதேசத்தில் நாளை இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. 54 தொகுதிகளில் நாளை காலை 7 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்குகிறது.
இங்குள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸ் தனித்து களம் இறங்கியுள்ளது. அக்கட்சியின் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மாநிலம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டனர்.
உத்தரபிரதேசத்தில் நடக்கும் கடைசிகட்ட தேர்தலையொட்டி காஜிபூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:

முன்னோர்களின் மண்
சாதி, மதப்பிரச்சனைகளில் நீங்கள்(பொதுமக்கள்) தவறாக வழிநடத்தப்படுகிறீர்கள். இதனால் அரசியல் தலைவர்கள் இழப்பு எதையும் சந்திக்காத நிலையில் நீங்கள் அதிகமானவற்றை இழப்பீர்கள். சிலர் மக்களை ஏழைகளாக வைத்து மீண்டும் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். இது என் முன்னோர்களின் மண். அவர்களின் ரத்தம் இந்த மண்ணை வளர்த்தது. மாநிலத்தில் உண்மையான, சரியான அரசியல் உருவாகும்வரை நான் தொடர்ந்து போராடுவேன். தேர்தல் முடிவு எப்படி இருந்தாலும், போராட்டத்தின் விளைவு என்னவாக இருந்தாலும் சரி, நான் மாநிலத்தை விட்டு வெளியேறமாட்டேன். உங்களுக்காக, உங்களுடன் சேர்ந்து போராடுவேன்.

மக்களுக்காக போராட்டம்
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உத்தர பிரதேசத்துக்கு நான் பொறுப்பாளராக வந்தேன். அப்போது சில மூத்த தலைவர்கள் (தற்போது கட்சியில் இல்லை) என்னிடம் வந்து, ‛இங்கு ஒன்றும் இல்லை. இங்கு போராட்டம் மட்டுமே நக்கிறது. வேறு மாநிலம் கேட்டு செல்லுங்கள்' என கூறினார்கள். இதுபற்றி சகோதரர் ராகுல் காந்தியிடம் நான் பேசினேன். அப்போது உத்தர பிரதேசத்திலேயே பணி செய்ய வேண்டும். சோகம், கொடுமையை சந்திக்கும் மக்களுக்காக போராட வேண்டும் என அவர் கூறினார். தற்போது வரை உத்தர பிரதேசத்திலேயே இருக்கிறேன்.

ஏழைகளிடம் அழிவு
பாஜகவினர் உங்களை ஏழைகளாகவே வைத்திருப்பார்கள். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி கொண்டு வந்து வரிசையில் நிற்க வைத்தனர். இவர்களது நடவடிக்கையால் நாட்டில் வணிகம் என்பது அழிந்துவிட்டது. கருப்பு பணம் இன்னும் வரவில்லை. கொரோனா திடீர் ஊரடங்கால் பெரிய தொழிலதிபர்கள் நன்கு வளர்ந்துவிட்டனர். ஏழைகளிடம் அனைத்தும் அழிந்துவிட்டது. விவசாய கொள்கைகள் விவசாயிகளுக்கு தீங்கு விளைவிக்கிறது. உலகம் சுற்றும் பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளிடம் பேசவில்லை.

தேசியவாதம் என்ன
விவசாயிகளின் குறைகளை கேட்காமல் தேசியவாதம் எதற்கு?, பாஜக அமைச்சரின் மகன் விவசாயிகளை நசுக்கியது எந்த வகையில் தேசியவாதமாக இருக்க முடியும்? . வெறும் வெற்று தேசியவாதத்தை வைத்து என்ன செய்ய. மக்களுக்கு வேலை வழங்க காங்கிரஸ் உருவாக்கிய அனைத்து அமைப்பு, நிறுவனங்களையும் பிரதமர் தனது நண்பர்களுக்கு விற்றுவிட்டார். இளைஞர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலை கொடுக்க முடியாத அரசை எப்படி தேசப்பற்று கொண்ட அரசாக அழைக்க முடியும்.

பாடம் புகட்டுங்கள்
எனது தந்தை பிரதமராக இருந்தபோது மக்களிடம் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்தார். இது பெரும் மாற்றத்தை உருவாக்கியது. ஆனால் தற்போது ஜனநாயகத்தை பாஜக தலைகீழாக மாற்றிவிட்டது. பிரதமரை தேர்தல் மேடைகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. இன்றைய சூழலில் தன்னை அகற்ற யாரும் இல்லை என நினைத்து மக்களை தவறாக வழிநடத்துகிறார். இந்த நிலைப்பாட்டை மாற்ற வேண்டும். தலைவர்கள் அனைவரும் கடவுள்கள் அல்ல. அவர்களும் சாதாரண மனிதர்களே. ஒருவருக்கு கட்டுப்பாடற்ற அதிகாரம் வழங்கப்பட்டால் அவர் கட்டுப்பாடற்ற நபராக மாறிவிடுவார். அதிகாரம் என்பது நீங்கள் கொடுத்தது, அது உங்களுக்கு தான் சொந்தம் என்பதை மறந்து பாஜக செயல்படுகிறது. இதுபோன்ற கட்சிகளுக்கு உங்கள் ஓட்டுக்கள் மூலம் பாடம் புகட்டுங்கள்'' என்றார்.












Click it and Unblock the Notifications