கொரோனாவா அப்படினா என்ன? மாஸ்க்கை மறந்து கோவிலில் லட்டுகளை பிடிக்க திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
லக்னோ: கொரோனாவுக்கும், தங்களுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் மாஸ்க்கை மறந்து, சமூக இடைவெளியை துறந்து உத்தரபிரதேசத்தில் ஒரு கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா அச்சம் மீண்டும் மக்களை சூழ்ந்திருக்கும் வேளையில், கோவிலில் வழங்கப்படும் லட்டுகளை பிடிக்க ஆயிரக்கணக்கானோர் முண்டியடித்து திரண்டனர்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிரி, புதிரி ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது.
அதிகரிக்கும் கொரோனா
சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் அடங்கி இருந்த கொரோனா, தற்போது 40,000-ஐ தாண்டி றெக்கை கட்டி பறந்து வருகிறது. நிலைமை இவ்வாறு இருக்க ஒவ்வொரு மாநிலமும் தங்கள் பகுதிகளில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகிறது. முகக்கவசம் அணியாமல் இருப்பவர்க்ளுக்கு அபராதம். இரவு நேர ஊரடங்குகளை அமல்படுத்தி வருகின்றன.
கோவிலில் திரண்ட மக்கள்
ஆனால் கொரோனாவுக்கும், தங்களுக்கும் ஏதும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் மாஸ்க்கை மறந்து, சமூக இடைவெளியை துறந்து உத்தரபிரதேசத்தில் ஒரு கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ளது ஸ்ரீ ராதா ராணி கோவில். இந்த கோவிலில் 'லட்டு மார் ஹோலி' என்னும் நிகழ்வு ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதாவது கோவிலின் வளாகத்தில் திரண்டு இருக்கும் பக்தர்களுக்கு கோவிலின் மேல் பகுதியில் இருக்கும் ஊழியர்கள் லட்டுகளை தூக்கி போடுவார்கள்.
லட்டுகளை பிடிக்க போட்டாபோட்டி
இதனை அங்கு திரண்டு இருக்கும் பெண்கள், குழந்தைகள் ஆண்கள் போட்டி போட்டு பிடிப்பார்கள். இவ்வாறு தூக்கி போடப்படும் இந்த புனித லட்டுகளை சாப்பிட்டால் நோய், நொடிகள் தீர்ந்து வாழ்வில் வளம் கொழிக்கும் என்பது ஐதீகம். இந்த நிலையில் இன்று ஸ்ரீ ராதா ராணி கோவிலில், 'லட்டு மார் ஹோலி' நிகழ்வு நடந்தது. அப்போது கோவிலின் வளாகத்தில் திரண்டிருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் போட்டி, போட்டு கோவில் ஊழியர்கள் தூக்கி எறியும் லட்டுகளை பிடித்தனர்.
அலட்சியத்துக்கு காரணம் யார்?
கொரோனா அச்சம் மீண்டும் மக்களை சூழ்ந்திருக்கும் வேளையில், லட்டுகளை பிடித்தவர்களோ, சமூக இடைவெளி என்றால் என்ன? என்பதுபோல் முண்டியடித்து நின்றனர். மாஸ்க் போடாததை பற்றியும் அவர்கள் துளி கூட கவலைப்படவில்லை. மக்களின் இந்த அலட்சிய போக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹோலி பண்டிகை மற்றும் வரவிருக்கும் பிற பண்டிகைகள், பஞ்சாயத்து தேர்தல்களைக் கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு அதிகரிப்பதைத் தடுக்க மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பு நடத்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். ஆனால் இதையெல்லாம் பற்றி கவலைப்படாமல் அதிகாரிகள் எப்படி இவ்வளவு கூட்டத்தை அனுமதித்தனர் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.