உ.பி-இல் பெரும் குழப்பம்.. தடுப்பூசியே இல்லை.. ஆனால் வேகின்சின் சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தடுப்பூசி போடாத இரண்டு பேருக்கு வேக்சின் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா 2ஆம் அலையின் தாக்கம் மோசமாக இருந்து வந்தது. தற்போது தான் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து 50 ஆயிரத்திற்குக் கீழ் சென்றுள்ளது.
கொரோனா அடுத்த அலை ஏற்படுவதற்கு முன் தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்த வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்,

கொரோனா 2ஆம் டோஸ்
மத்திய அரசின் புதிய வேக்சின் கொள்கை அமலுக்கு வந்ததிலிருந்து தடுப்பூசி பணிகள் வேகம் பெற்றுள்ளது. இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் தடுப்பூசி போடாத இரண்டு பேருக்கு வேக்சின் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்ட சம்பவம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அலகாபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் மங்கலம். அவர் கோவாக்சின் முதல் டோஸ் எடுத்துக் கொண்ட நிலையில், 2ஆம் டோஸ் தடுப்பூசி போடாமலேயே அவருக்கு வேக்சின் சான்றிதழ் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.

மனித பிழை
இது தொடர்பாக அங்குள்ள அதிகாரிகளிடம் இவர் புகாரளித்துள்ளார். கவனக்குறைவு காரணமாக இந்த பிழை ஏற்பட்டதாகவும் தடுப்பூசி மையத்திற்கு வந்து 2ஆவது டோஸை எடுத்துக் கொள்ளும்படியும் கூறியுள்ளனர். இதையடுத்து அவரும் மையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால் 2 டோஸ் தடுப்பூசி ஏற்கனவே போட்டுக் கொண்டதாகக் கோவின் தளத்தில் உள்ளதால் தங்களால் எதுவும் செய்ய முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேக்சின் எடுக்க முடியவில்லை
அதேபோல மவு மாவட்டத்தில், 65 வயதான உம்தா ராயும் இதேபோன்ற சூழலை எதிர்கொண்டுள்ளார். அவருக்கு வேக்சின் முதல் டோஸ் கொடுக்காமலேயே தடுப்பூசி போட்டதாகச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் புகார் அளித்ததாகவும் இருப்பினும்கூட வேக்சின் எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

என்ன நடந்தது
இது கவனக்குறைவால் ஏற்பட்ட புகார் என்றும் இது குறித்து எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தடுப்பூசி பொறுப்பு அதிகாரி தெரிவித்தார். அதேநேரம் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். முன்னதாக மத்தியப் பிரதேசத்திலும் 14 வயது சிறுவனுக்கு வேக்சின் போடப்பட்டதாகச் சான்றிதழ் அனுப்பப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.












Click it and Unblock the Notifications