உ.பி. தேர்தல்: ஆடுபுலி ஆட்டம் கனஜோர்... அகிலேஷ் கட்சியின் 4 எம்.எல்.சி.க்கள் பாஜகவுக்கு ஓட்டம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த 4 எம்.எல்.சிக்கள் பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க) இணைந்துள்ளனர். பாஜகவில் இணைந்த 4 எம்.எல்.சிக்களும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள் என்பதால் அக்கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. வழக்கம் போல தேர்தலுக்கு முந்தைய கட்சித் தாவல்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டன.

சமாஜ்வாதி கட்சியில் பிஎஸ்பி எம்.எல்.ஏக்கள்
அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 6 பேர் சமாஜ்வாதி கட்சிக்கு தாவினர். அவர்களுடன் பாஜக எம்.எல்.ஏ ஒருவரும் சமாஜ்வாதி கட்சியில் ஐக்கியமானார்.

பாஜகவுக்கு தாவல்
இந்த நிலையில் சமாஜ்வாதி கட்சிக்கு பதிலடி தரும் வகையில் அக்கட்சியின் 4 எம்.எல்.சி.க்களை பாஜக வளைத்துள்ளன. இந்த 4 பேரும் உள்ளாட்சிகளின் பிரதிநிதிகளாக சட்ட மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த 4 பேரும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்கள். இது பாஜகவுக்கு பலமாக அமையக் கூடும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.

சந்திரசேகர் உறவினர்
இவர்களில் ரவிசங்கர் பப்பு, முன்னாள் பிரதமர் சந்திரசேகரின் உறவினர். சந்திரசேகரின் மகன் நீரஜ் சேகர் ஏற்கனவே பாஜகவில் ஐக்கியமானவர். முன்னாள் அமைச்சர் மார்க்கண்டய் சந்தின் மகன் சிபி சந்தும் பாஜகவுக்கு தாவி இருக்கிறார். முன்னாள் அமைச்சர் ராஜ்பையாவின் உறவினரான அக்ஷய் பிரதாப் சிங்கும் இப்போது பாஜகவில் இணைந்துவிட்டார். அத்துடன் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.சி ஜவுன்புர் பிரிஜேஸ் சிங்கும் பாஜக பக்கம் சாய்ந்துள்ளார்.

பெரும்பாலானோர் தாக்கூர் சமூகம்
தற்போது பாஜகவில் இணைந்துள்ளவர்களில் பெரும்பாலானோர் தாக்கூர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தாக்கூர் சமூக வாக்குகள் பாஜகவுக்கு கணிசமான அளவு கிடைக்கவில்லை. அந்த நிலையை சட்டசபை தேர்தலில் மாற்றும் வகையில் தாக்கூர் பிரமுகர்கள் வளைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து. இப்படி தங்களிடம் எஞ்சி இருக்கும் தலைவர்களும் கட்சி தாவக் கூடாது என்பதில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உறுதியாக உள்ளார். இதனால் இப்போதே வேட்பாளர் பட்டியல் உள்ளிட்டவைகளில் பிரியங்காவும் காங்கிரஸ் மேலிடமும் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. கடைசிநேர கட்சித் தாவல்களை இம்முறை தடுக்க நினைக்கிறது காங்கிரஸ். காங்கிரஸின் வியூகம் பலிக்குமா என்பது எதிர்வரும் நாட்களில் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications