'உபி வன்முறையில் ஆதாரம் இல்லை..யாரையும் அவசரப்பட்டு கைது செய்ய மாட்டோம்..' முதல்வர் யோகி திட்டவட்டம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் மத்திய இணை அமைச்சரின் கார் மோதி ஏற்பட்டுள்ள விபத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் முறையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மத்திய இணை அமைச்சருக்கு எதிராகக் கருப்பு கொடி போராட்டத்தை விவசாயிகள் நடத்தினர். இந்க போராட்டத்தை முடித்துக் கொண்டு விவசாயிகள் அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் மின்னல் வேகத்தில் வந்த இணை அமைச்சரின் கார்கள் விவசாயிகள் மீது மோதியது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

உபி விபத்து
இந்த விபத்தில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொல்லப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய காரை அமைச்சரின் மகன் ஓட்டி வந்ததாகவும் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான வழக்கில் உபி அரசின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், ஐபிசி 302 பிரிவில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் யாரையும் கைது செய்யாமல் இருக்கிறீர்கள் என்றும் இப்படித்தான் மற்ற வழக்கிலும் நடந்து கொள்வீர்களா என்றும் கடுமையாகச் சாடியிருந்தது.

யாரையும் கைது செய்ய மாட்டோம்
இந்தச் சூழலில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் முறையான ஆதாரம் இல்லாமல் எந்தவொரு கைது நடவடிக்கையும் எடுக்கப்படாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "சட்டத்தின் முன் அனைவரும் சமம் தான். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி ஆதாரம் இல்லாமல் யாரையும் கைது செய்ய முடியாது. இது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. தவறு செய்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள். யாருக்கும் அநீதி இழைக்கப்படாது, எவ்வளவு அழுத்தம் வந்தாலும் முறையான நடவடிக்கை எடுப்போம்.

நல்லெண்ண தூதர்கள் இல்லை
ஜனநாயகத்தில் வன்முறைக்கு ஒருபோதும் இடமில்லை. சட்டம் அனைவருக்குமான பாதுகாப்பை அளித்துள்ள போது, ஒருவர் தானே சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள தேவையில்லை" என்று தெரிவித்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சந்திக்க எதிர்க்கட்சி தலைவர் லக்கிம்பூர் சென்றதை விமர்சித்துள்ள முதல்வர் யோகி, அவர்கள் ஒன்றும் நல்லெண்ண தூதர்கள் இல்லை என்றும் சாடியுள்ளார். சட்ட ஒழுங்கை பாதுகாப்பது தான் இப்போது அரசுக்கு இருக்கும் ஒரே நோக்கம் என்று தெரிவித்துள்ள உபி முதல்வர் யோகி, பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்த சிலருக்கு இந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையின் இறுதியில் இந்த விஷயம் தெளிவாகும் என்றும் தெரிவித்தார்.

யோகி மறுப்பு
இந்த வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனைப் பாதுகாக்க உபி அரசு உதவுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள யோகி, "இது தொடர்பாக வீடியோ எல்லாம் ஒன்றும் இல்லை. இது தொடர்பாக யாராவது ஆதாரம் கொடுத்தால் நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.யூகங்கள் அடிப்படையில் நாங்கள் யாரையும் கைது செய்ய மாட்டோம். அதேநேரம் யாராவது குற்றம் செய்யப்பட்டது உறுதியானால் அவர் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுப்போம்" என்றும்

லவ் ஜிகாத்
சில அரசியல் தலைவர்கள் நிலைமையை மேலும் மோசமாக்கப் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருகின்றனர் என்றும் இதுபோன்ற பேச்சுகளுக்குப் பொதுமக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் காதல் என்ற பெயரில் பெண்களை மதமாற்றம் செய்வதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றும் லவ் ஜிகாத்தை தடை செய்யவே சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications