இப்படியே போனால் கடைசியில் காங்கிரசில் சோனியாவும்-ராகுலும் தான் இருப்பாங்க.. உ.பி துணை முதல்வர் கேலி!
லக்னோ: காங்கிரஸ் கட்சியில் இறுதியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி மட்டுமே இருப்பார்கள் என்றும் ஏனைய அனைவரும் அக்கட்சியில் இருந்து விலகி விடுவார்கள் என்றும் உத்தர பிரதேச துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா தெரிவித்துள்ளார்.
தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் காங்கிரஸ் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலரும் விலகி வருவது அக்கட்சிக்கு மேலும் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர முகமாக இருந்த ஜோதிர் ஆதித்ய சந்தியா தொடங்கி, கபில் சிபல், அமரிந்தர் சிங், அஸ்வினி குமார் என காங்கிரஸில் இருந்து விலகிய தலைவர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
முதல்வரை சந்தித்தபோது தேம்பித் தேம்பி அழுத கள்ளக்குறிச்சி மாணவியின் தாய்.. ஆறுதல் சொன்ன ஸ்டாலின்!
காங்கிரசில் இருந்து விலகும் தலைவர்கள்
இந்தப் பட்டியலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத்தும் தற்போது இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்துள்ள குலாம் நபி ஆசாத், சமீப காலமாக அக்கட்சியின் தலைமை மீது அதிருப்தியில் இருந்தார். கடந்த 16 ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரசின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில், குலாம் நபி ஆசாத் தனது பதவியை ராஜினாமா செய்து கட்சி தலைமைக்கு அதிர்ச்சி அளித்தார்.
கேலி செய்யும் வகையில்...
தொடர்ந்து, நேற்று குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். இது தொடர்பாக சோனியா காந்திக்கு 5 பக்க கடிதமும் எழுதிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்தும் இருந்தார். குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து விலகிய நிலையில், இது குறித்து உத்தர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வர் கேஷவ் பிரசாத் மவுர்யா, காங்கிரஸ் கட்சியை கேலி செய்யும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி மூழ்கும் கப்பல்
இது தொடர்பாக கேஷவ் பிரசாத் மவுர்யா கூறுகையில், ''இன்னும் கொஞ்ச காலம் கழித்து காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் மட்டுமே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்'' என்றார். முன்னதாக பாஜக செய்தி தொடர்பாளர் கவுரவ் பாட்டியா, 'காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல் என்றும் அந்த கட்சியில் தலைமை மற்றும் சித்தாந்தம் இல்லை'' என்றும் குலாம் நபி ஆசாத் காங்கிரசில் இருந்து விலகியது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல..
இது குறித்து அவர் கூறுகையில், ''காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கும் கப்பல். அந்த கட்சியில் தலைமை இல்லை. சித்தாந்தம் இல்லை. கட்சியின் மூத்த தலைவர்கள் பதவி விலகி வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி ஆக்கப்பூர்வமான பங்களிப்பு செய்ய தவறுவது ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றே நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் அனைத்திற்கும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். காங்கிரஸ் கட்சி மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கவில்லை என்று அக்கட்சிக்குள் இருந்தே தற்போது கலகக்குரல்கள் எழுந்துள்ளன'' என்றார்.