"மோடி- யோகி மேஜிக்.." படத்துடன் புடவைகள்! 1000 தினக்கூலிகள்! கலகலக்கும் உத்தரப்பிரதேச தேர்தல் களம்!
லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு நெருங்கிவரும் நிலையில், பிராண்ட் மோடி -யோகி என்ற திட்டத்தைக் கையில் எடுத்திருக்கிறது பாஜக.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதிகள் விரைவில் நடைபெறவுள்ளன. இதற்கான வேலைகளை அனைத்து மாநில கட்சிகளும் துரிதமாக செயல்படுத்தி வருகின்றன.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரபிரதேசத்தில் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அங்கு அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பிரச்சாரத்தின் தீவிரம் ஒருபுறம் அதிகரிக்க அதிகரிக்க, மறுபுறம் அவற்றில் பல சுவாரசியமான நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன. பாஜக, சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என அனைத்துக் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்கிறார். பிரதமர் மோடி காணொலி வாயிலாக பிரசாரத்தைத் துரிதப்படுத்தியுள்ளார். மாநிலம் வளர்ச்சி அடைந்திருப்பதாகவும், வன்முறை இல்லாத மாநிலமாகவும், பெண்களுக்குப் பாதுகாப்பான இடமாகவும் உத்தரப்பிரதேசம் திகழ்வதாக பிரதமர் மோடி பாராட்டியிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் முதன் முறையாக கோரக்பூரில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பல இந்து அமைப்புகள் களத்தில் இருக்கின்றன. பாஜக மீண்டும் வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் சொன்னாலும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தீவிரமாக தன்னுடைய பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பாஜகவில் இருந்தே அமைச்சர்களைத் தங்கள் கட்சிக்குள் இழுத்திருக்கிறார்.

பிரசாரம்
அகிலேஷ் யாதவின் பிரசாரத்தால், உத்தரப்பிரதேச பாஜகவினர் கொஞ்சம் ஆடிப்போய்தான் இருக்கிறார்கள். இதனால் தங்கள் பிரசாரத்தைத் துரிதப்படுத்த தயாராகி வருகிறார்கள். சூரத்தை சேர்ந்த புடவை வியாபாரி, பிரதமர் மோடி மற்றும் உபி முதல்வர் யோகியின் புகைப்படத்தை அச்சிட்டு 1000 புடவைகளை தயாரித்து, பிரசாரத்துக்கு வழங்கியுள்ளார். இந்தப் புடவைகளை கட்சியினருக்கும் தொண்டர்களுக்கும் கொடுத்து பிரசாரத்தை தொடங்கியுள்ளனர்.

மோடி-யோகி
கடந்த தேர்தலில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு என்ற உறுதியைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தனர். இந்தத்தேர்தலில் மோடி மற்றும் யோகியின் பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்ல உள்ளனர். மோடி மற்றும் யோகியின் மேஜிக் என்று இதை பாஜவினர் சொல்கின்றனர். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய, 50 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை வழங்கி, தினக்கூலிகளை பணியமர்த்தி, மோடி படம் போட்ட புடவைகளை அணிந்துகொண்டு பிரசாரத்தை மேற்கொள்கின்றனர். அதேபோல், மோடி மற்றும் யோகியின் பெருமையை சொல்லும் விதமாக பாடல்களைப் பாடியும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications