உ.பி.: துப்பாக்கி உரிமம் பெற்ற பிராமணர்கள் குறித்த கணக்கெடுப்பு.. திடீரென பின்வாங்கிய அரசு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் எத்தனை பிராமணர்கள் துப்பாக்கி வைத்துக் கொள்ள உரிமம் பெற்றுள்ளார்கள், எத்தனை பேர் புதிதாக விண்ணப்பித்துள்ளார்கள் என கணக்கெடுக்க முதலில் உத்தரவிட்ட உத்தரப்பிரதேச அரசு பின்னர் அந்த உத்தரவிலிருந்து பின்வாங்கியது.
சுல்தான்பூர் மாவட்டம் லம்பா தொகுதியைச் சேர்ந்தவர் பாஜக எம்எல்ஏ தேவமணி திவிவேதி. இவர் கடந்த 16ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநில சட்டசபை முதன்மைச் செயலாளர் பிரதீப் துபேவிற்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

அந்த கடிதத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தில் எத்தனை பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்? எத்தனை கொலைக்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள், எத்தனை குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள்? பிராமணர்களுக்கு பாதுகாப்பு அளிக்க மாநில அரசின் திட்டம் என்ன,முன்னுரிமை அடிப்படையில் பிராமணர்களுக்கு மாநில அரசு துப்பாக்கிக்கான உரிமத்தை வழங்குமா?
துப்பாக்கிக்கான உரிமம் கேட்டு எத்தனை பிராமணர்கள் விண்ணப்பித்துள்ளார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளை தேவமணி எழுப்பியிருந்தார். இதையடுத்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில அரசு ஒரு கடிதம் எழுதியிருந்தது.
அதில் எத்தனை பிராமணர்கள் துப்பாக்கிக்கு உரிமம் கேட்டு விண்ணப்பித்துள்ளார்கள், அவர்களில் எத்தனை பேருக்கு உரிமம் கொடுக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களை அளிக்குமாறு உத்தரவிடப்பட்டது. அந்த கடிதத்தில் மாநில உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் பிரகாஷ் சந்திர அகர்வால் கையெழுத்திட்டிருந்தார்.
இதுகுறித்து முதன்மைச் செயலாளர் பிரதீப் துபேவிடம் இந்தியன் எக்ஸபிரஸ் செய்தி நிறுவனம் கேள்வி எழுப்புகையில், அது போன்ற எந்த ஒரு உத்தரவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார். அதுபோல் இந்த புகார் கடிதத்தை அளித்த திவிவேதியிடம் கேட்ட போது அதுகுறித்து எந்த தகவல்களும் தெரியாது என கூறிவிட்டார்.
இதுகுறித்து அகர்வாலிடம் கேட்ட போது அவர் பதில் அளிக்க மறுத்துவிட்டார். மேலும் இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரியிடம் கேள்வி எழுப்புகையில் அவர் கணக்கெடுப்பு குறித்து உத்தரவிட்ட அரசே அந்த உத்தரவிலிருந்து பின்வாங்கிவிட்டதாக தெரிவித்தார். அது போன்ற தகவல்களை கேட்பது இனி தொடராது என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications