கடுமையாக விமர்சித்த உச்ச நீதிமன்றம்.. உ.பியில் கன்வார் யாத்திரை ரத்து.. ஆதித்யநாத் முடிவு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடைசியில் ஒருவழியாக கன்வார் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து இந்த யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடம் கொரோனா காரணமாக கன்வார் யாத்திரை நடக்காத நிலையில், இந்த வருடம் உத்தர பிரதேச அரசு ஜூலை 25ம் தேதி இந்த விழாவை நடத்த அனுமதி அளித்து இருந்தது. கொரோனா மூன்றாம் அலை எப்போது வேண்டுமானாலும் பரவலாம் என்ற நிலை உள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த யாத்திரைக்கு அனுமதி அளிக்கப்பட்டது விமர்சனங்களை சந்தித்தது. உத்தரகாண்ட் அரசு இந்த விழாவிற்கு ஏற்கனவே அனுமதி மறுத்து இருந்தது. இந்த நிலையில் உத்தர பிரதேச அரசு மட்டும் இந்த விழாவிற்கு அனுமதி அளித்ததை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சனம் செய்தது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கன்வார் யாத்திரை நடத்தும் உத்தர பிரதேச அரசின் முடிவிற்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதி ரோஹின்டன் நாரிமன், நீதிபதி பிஆர் கவாய் அமர்வு விசாரணை நடத்தியது.
இந்த வழக்கு விசாரணையில், கன்வார் யாத்திரை நடத்துவது குறித்து உத்தர பிரதேச அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். கன்வார் யாத்திரை குறித்து திங்கள் கிழமைக்குள் உத்தர பிரதேச அரசு முடிவு எடுக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
அடையாளத்திற்காக பக்தர்கள் இன்றி பூஜை மட்டும் நடத்தலாம். மற்றபடி கங்கை நீரை வாகனங்கள் மூலம் கன்வார் துறவிகள், பக்தர்களுக்கு கொண்டு செல்லலாம். ஆனால் கூட்டம் கூட்டமாக கன்வார் யாத்திரையை நடத்துவது சரியாக இருக்காது என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்த விசாரணையில், பிரதமர் மோடி மூன்றாம் அலை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் கூட்டமாக கூட கூடாது என்று மருத்துவ வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அப்படி இருக்கும் போது உத்தர பிரதேச அரசு கான்வார் யாத்திரை நடத்த அனுமதி அளித்தது மக்களை குழப்பம் செயல் என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கடைசியில் ஒருவழியாக கன்வார் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்தை தொடர்ந்து யாத்திரையை இந்த வருடமும் கைவிட உத்தர பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. நேற்று இரவு நடந்த ஆலோசனைக்கு பின் உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத் இந்த முடிவை எடுத்துள்ளார்.
ஹரித்வாரில் உள்ள கங்கை நதியை எடுத்து அதன் மூலம் சிவனுக்கு பூஜை செய்வதற்காக கன்வார் யாத்திரை ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுவது வழக்கம். வடஇந்தியாவில் இருக்கும் பல்வேறு இந்து மத துறவிகள், சாமியார்கள், பக்தர்கள் ஹரித்வார் வந்து கங்கையில் இருந்து நீரை எடுத்து செல்வார்கள். ஹரித்வாரில் இருந்து நீரை எடுத்து சென்று தங்கள் பகுதியில் உள்ள சிவன் சிலைக்கு இந்த தண்ணீரை ஊற்றி வழிபாடு நடத்துவதுதான் இந்த யாத்திரையாகும் .












Click it and Unblock the Notifications