நீங்க சாமியாரா.. அப்படீன்னா உங்களுக்கு பென்ஷன் உண்டு.. இங்கல்ல.. யோகி பூமியில்!
லக்னோ: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அடுத்து ஒரு அதிரடியைக் களம் இறக்கியுள்ளார். அதாவது சாதுக்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அவர் அறிவித்துள்ளார். இது உ.பியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
லோக்சபா தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்குள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ, யாரையெல்லாம் ஐஸ் வைக்க முடியுமோ, எதையெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார்கள் பல்வேறு மாநில ஆட்சியாளர்கள். அந்த வகையில் உ.பியில் சாதுக்களை கவர் செய்ய ஒரு களேபரமான ஐடியாவை அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.

இவரே ஒரு யோகி என்பதால் தன்னைப் போன்ற சாதுக்களை மொத்தமாக கவரும் வகையில், பென்ஷன் திட்டத்தை அறிவித்துள்ளார். 60 வயதைத் தொட்ட சாமியார்களுக்கு இதன் மூலம் ஓய்வூதியம் அளிக்கப்படுமாம்.
முதியோர் பென்ஷன் திட்டத்தின் கீழ் இந்த ஓய்வூதியம் வழங்கப்படவுள்ளதாம். இதுதொடர்பாக ஜனவரி 30ம் தேதி வரை மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்தவுள்ளனர். அதில் சாதுக்கள் தங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
தற்போது பிரயாக் ராஜ் நகரில் கும்பமேளா நடந்து வருகிறது. லட்சக்கணக்கான சாமியார்கள் அதில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் மொத்த சாமியார்களையும் குஷிப்படுத்தும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் யோகி ஆதித்யநாத்.
இதுதவிர கைவிடப்பட்ட பெண்கள், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது மாதம் கொடுக்கப்பட்டு வரும் ரூ. 400 உதவித் தொகையை ரூ. 500 ஆக அதிகரித்தும் யோகி அரசு உத்தரவிட்டுள்ளது.
சாதுக்களுக்கு ஓய்வூதியத் திட்டம் என்ற யோகி அரசின் அறிவிப்புக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இது இந்துக்களின் வாக்குகளைக் கவரும் மத ரீதியிலான முயற்சி என்று அவை குற்றம் சாட்டியுள்ளன.
இதுகுறித்து சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில் ராம் லீலா விழாவின்போது ராமர், சீதை, ராவணன், லட்சுமணன் வேடம் போடுவோருக்கும் இந்த ஓய்வூதியத்தை யோகி அரசு வழங்க வேண்டும் என்று கிண்டலடித்துள்ளார்.












Click it and Unblock the Notifications