“ஆதாரம்” இல்லையாம்.. வீட்டில் தொழுததாக புகார்! முஸ்லிம்கள் மீதான வழக்கை ரத்து செய்த உபி போலீஸ்
லக்னோ: வீட்டில் முன்னறிவிப்பு இன்றி கூட்டாக தொழுகை நடத்தியதாக கூறி 26 இஸ்லாமியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உத்தரப்பிரதேச காவல்துறை ரத்து செய்து இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் சாஜ்லெட் பகுதியில் உள்ள துல்ஹேபூர் கிராமத்தில் உள்ள வீட்டில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி தொழுகை நடத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சந்திரபால் சிங் என்ற நபர் காவல்துறையிடம் புகாரளித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில், அடையாளம் தெரியாத 16 பேர் மற்றும் அடையாளம் தெரியாத 10 பேர் என மொத்தம் 26 பேர் மீது காவல்துறையினர் மதவழிபாட்டில் ஈடுபடுவதாக மக்களுக்கு இடையூறு செய்ததாக வழக்குப்பதிவு செய்தனர்.

லுலு மால்
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் புதிதாக திறக்கப்பட்ட லுலு மாலில் இஸ்லாமியர்கள் சிலர் தொழுகை நடத்தியதாக கூறி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்தனர். உத்தரப்பிரதேச போலீசாரின் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பலர் கேள்வி
பொது இடத்தில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது தவறு என்று உத்தரப்பிரதேச காவல்துறையும் பாஜகவினரும் விளக்கமளித்தனர். இந்த நிலையில் வீட்டில் மத வழிபாட்டில் ஈடுபடுவதும் தவறா என்று பலரும் என்று கேள்வி எழுப்பி பலரும் உத்தரப்பிரதேச காவல்துறையிடம் கேள்வி எழுப்பினர்.

உமர் அப்துல்லா கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருக்கும் காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, "அண்டை வீட்டாரில் ஒருவர் தனது 26 நண்பர்களுடன் சேர்ந்து பூஜை செய்து இருந்தால் அது சிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கும். கூட்டம் சேர்ந்தது பிரச்சனை இல்லை. தொழுகை நடத்தினார்கள் என்பதே பிரச்சனை." என்று தெரிவித்தார்.

ஒவைசி கேள்வி
இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐதராபாத் எம்.பியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவருமான அசதுத்தீன் ஒவைசி, "தொழுகையை எங்கு வேண்டுமானாலும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டது. பின்னர் ஏன் வீட்டில் தொழுகை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்? இது அநீதி." என்றார்.

வழக்கு வாபஸ்
இந்த நிலையில் சர்ச்சைக்குரிய இந்த வழக்கை வாபஸ் பெறுவதாக உத்தரப்பிரதேச காவல்துறை அறிவித்து உள்ளது. இதுகுறித்து மூத்த காவல் கண்காணிப்பாளர் ஹேமந்த் குடியால், இந்தி நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில், "குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் 26 பேர் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளோம்." என்றார்.












Click it and Unblock the Notifications