யாருங்க இவங்க.. 'சாமி' பட பாணியில்.. போலீஸாரை 'செக்' செய்த பெண் எஸ்.பி.. அலறிய உத்தரபிரதேசம்
லக்னோ: உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் காவல் கண்காணிப்பாளர் ஒருவர், தனக்கு கீழ் பணியாற்றும் போலீஸார் எவ்வாறு செயல்படுகின்றனர் என்பதை பார்ப்பதற்காக மாறுவேடத்தில் சூப்பர் டெஸ்ட் வைத்த சம்பவம் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகிறது.
சினிமாவில் வருவதை போல பெண் எஸ்.பி. சாதாரண உடை அணிந்துகொண்டு பாதிக்கப்பட்டவரை போல நடித்ததும், பின்னர் மாறுவேடத்தை கலைத்து நிஜ போலீஸாக மாறியதும் சமூக வலைதளத்தில் அப்படியே நேரலையாக ஒளிபரப்பானது.
பெண் எஸ்பியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருவதோடு, அனைத்து போலீஸ் அதிகாரிகளும் இதுபோல உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ரவுடிகளுக்கு சிம்மசொப்பனம்..
உத்தரபிரதேச மாநிலம் அவுரியா மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன்பு காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றவர் சாரு நிகம். ஐபிஎஸ் அதிகாரியான இவர், கண்டிப்புக்கும், அதே சமயத்தில் மக்களை அரவணைத்து செல்வதிலும் பெயர் பெற்றவர். எந்த மாவட்டத்திலாவது குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்தால், அங்கு சாரு நிகம்தான் எஸ்பியாக பணியிடமாற்றம் செய்யப்படுவார். அவர் எந்த மாவட்டத்துக்கு மாற்றப்படுகிறாரோ அங்கு சில மாதங்களிலேயே ரவுடிகளின் கொட்டம் அடங்கிவிடும்.

போலீஸாருக்கு அதிரடி உத்தரவு
இதனிடையே, அவுரியா மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே அதிக அளவில் குற்றங்கள் நடந்து வந்தன. இதன் காரணமாக, ஐபிஎஸ் அதிகாரி சாரு நிகம் அவுரியாவுக்கு எஸ்பியாக நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து, குற்றச் செயல்களை தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், பொதுமக்கள் போலீஸாரை அழைத்தால் ஒரு சில நிமிடங்களிலேயே சம்பவ இடத்துக்கு வர வேண்டும் என அவர் அண்மையில் உத்தரவிட்டார்.

மாறுவேடத்தில் சென்ற எஸ்பி..
இந்நிலையில், தனது இந்த உத்தரவு எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதை பார்க்க முடிவு செய்த சாரு நிகம், இதற்கு பக்காவாக ஒரு ஐடியாவை ரெடி செய்தார். அதன்படி, இன்று காலை சுடிதார் அணிந்துகொண்டு, துப்பட்டாவால் முகத்தை மூடியபடி அங்குள்ள ஒரு பகுதிக்கு அவர் சென்றார். பின்னர் அவரே தனக்கு தெரிந்த இரண்டு பேரை மோட்டார் சைக்கிளில் வரவழைத்து, 112 என்ற காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். அப்போது தன்னிடம் இருந்து நகை, பணத்தை இருவர் பறிக்க முயல்வதாக அவர் கூறினார். அதற்கு எதிர்முனையில் இருந்த காவலர், "எதற்கும் கவலைப்படாதீர்கள்.. 3 நிமிடங்களுக்குள் நாங்கள் அங்கு வந்துவிடுவோம்" எனக் கூறியுள்ளார்.

அலறிய போலீஸார்
அதன்படியே, 4 நிமிடங்களில் அங்கு வந்த போலீஸார் அங்கு நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்களை காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்ல முற்பட்டனர். அப்போது போலீஸ் உடைக்கு மேல் அணிந்திருந்த சுடிதாரை கழட்டி எஸ்பியாக மாறினார் சாரு நிகம். இதை சற்றும் எதிர்பார்க்காத போலீஸார், ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டனர். பின்னர் அவர்களை ஆசுவாசப்படுத்திய எஸ்பி சாரு நிகம், அவர்களின் துரிதமான நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்தார். இவை அனைத்தையும் லைவ் வீடியோவாக எடுத்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், எஸ்பி சாரு நிகத்துக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications