ஹமாசை வீழ்த்த ரெடி.. நானும்.. 1000 சீடர்களும் வரோம்.. இஸ்ரேல் செல்ல துடிக்கும் உபி சாமியார்
லக்னோ: காசா மீது இஸ்ரேல் தீவரமான தாக்குதலை தொடுத்து வரும் நிலையில், இஸ்ரேல் படைக்கு உதவ தன்னையும் தன்னுடன் சேர்த்து 1,000 பேரையும் இஸ்ரேலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் யதி நரசிங்கானந்த் இஸ்ரேல் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
காலங்காலமாக ஒடுக்குமுறைக்கும், ஆக்கிரமிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட பாலஸ்தீனத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று பல்வேறு குரல்கள் எழுந்தன. ஆனால் அகதிகளாக வந்த யூதர்களோ இந்த குரல்களை நசுக்கி இஸ்ரேல் எனும் நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்திக்கொண்டே சென்றனர். இதன் விளைவு பாலஸ்தீன விடுதலை இயக்கங்கள் உருவாகி அது ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தது. இதுதான் சாக்கு என இஸ்ரேலும், மேற்கு நாடுகளும் இந்த அமைப்புகளை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி அதன் மீதான தாக்குதலை அதிகப்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாகதான் பழிவாங்கும் நடவடிக்கையாக கடந்த 7ம் தேதியன்று பாலஸ்தீன விடுதலை அமைப்பான 'ஹமாஸ்', இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை தொடுத்தது. ஒரே நேரத்தில் சுமார் 5000க்கும் அதிகமான ஏவுகணை ஏவியதால் இஸ்ரேலின் சில பகுதிகள் பலத்த சேதமடைந்தன. மத்திய கிழக்கில் மிகவும் பாதுகாப்பான நாடாக தன்னை கூறிக்கொண்டிருந்த இஸ்ரேலுக்கு இது கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. எனவே பதில் தாக்குதலை உக்கிரமாக தொடங்கியிருக்கிறது. இந்த தாக்குதல் 8வது நாளாக இன்று நீடித்து வரும் நிலையில் காசாவில் உயிரிழப்பு 1500ஐ கடந்திருக்கிறது.
இந்நிலையில் இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வர இஸ்லாமிய நாடுகள் முயன்று வருகின்றன. ஆனால் மோதலை தீவிரப்படுத்தும் விதமாக இஸ்ரேலின் பங்காளி நாடான அமெரிக்கா, தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ளது. மற்றொருபுறம் இளைய பங்காளியான பிரிட்டன் தனது போர் கப்பலை அனுப்ப முயன்று வருகிறது. இவை மத்திய கிழக்கு பகுதியில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த பலத்தை புரிந்துக்கொண்ட இஸ்ரேல் காசா எனும் பகுதி முற்றிலுமாக தடம் தெரியாமல் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது. இந்நிலையில், இஸ்ரேல் படைக்கு உதவ தன்னையும் தன்னுடன் சேர்த்து 1,000 பேரையும் இஸ்ரேலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த சாமியார் யதி நரசிங்கானந்த் கூறியுள்ளார்.
இவர் இது போன்ற பல சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் பெற்றவராவார். "இந்தியாவின் பிரதமராக முஸ்லிம் ஒருவர் பதவியேற்றால், 50 சதவீத ஹிந்துக்கள் மதம் மாற்றப்பட்டு விடுவர்" என கடந்த ஆண்டு இவர் பேசியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அதேபோல இந்துக்கள் அதிகமான குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அதேபோல டாஸ்னாவில் உள்ள அதே தேவி கோயிலுக்கு சொந்தமான குழாயிலிருந்து தண்ணீர் பிடித்ததற்காக ஆசிஃப் எனும் முஸ்லீம் சிறுவன் தாக்கப்பட்டார். அப்போது இவர் அக்கோயில் மடத்தின் தலைவராக இருந்தார். இந்த தாக்குதல் சம்பவத்தில் தனக்கு வருத்தம் ஏதும் கிடையாது என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications