நாடே அதிர்ந்த “அறை”.. மாணவர்களிடம் முஸ்லிம் சிறுவனை அடிக்க சொன்ன ஆசிரியை! சின்ன விசயம் என விளக்கம்
லக்னோ: உத்தரப்பிரதேச முஸ்லிம் சிறுவனை சக மாணவர்களை வைத்து ஆசிரியர் தாக்க சொன்ன வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதனை நியாயப்படுத்தி அந்த ஆசிரியை பேட்டி அளித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநில முசாபர் நகரில் திரிப்தா தியாகி என்ற பள்ளி ஆசிரியை முஸ்லிம் சிறுவனை நிற்க சக மாணவ மாணவிகள் ஒவ்வொருவராக அழைத்து கன்னத்தில் அறைய சொல்லும் வீடியோ நேற்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வலி தாங்க முடியாமல் அந்த சிறுவன் அழும் காட்சிகளும் அதில் இடம்பெற்று உள்ளன.

மாணவன் தாக்கப்படும்போது அந்த ஆசிரியரை மத ரீதியாக இஸ்லாமியர்களை விமர்சித்தும் பேசுவதும் பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ வெளியானதை அடுத்து பலரும் அதை பகிர்ந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். பல்வேறு அரசியல் தலைவர்களும் இதனை கண்டித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக அந்த ஆசிரியை மீது முசாபர்நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆசிரியை திரிப்தா தியாகி செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்காமல் அதை நியாயப்படுத்தி பேசி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் பேசுகையில், "வீட்டுப் பாடம் செய்யாத காரணத்தால் அந்த சிறுவனை மற்ற சிறுவர்களை விட்டு அடிக்க சொன்னேன். சிறுவனிடம் கண்டிப்பாக நடந்துகொள்ளுமாறு பெற்றோர் கூறினார்கள். நான் ஒரு மாற்றுத் திறனாளி என்பதால் மற்ற மாணவர்களை விட்டு தாக்க சொன்னேன். அப்போதுதான் அவன் வீட்டுப் பாடம் செய்து வருவான்.
இதனை மத ரீதியாக திசை திருப்பும் வகையில் வீடியோவை எடிட் செய்து உள்ளார்கள். அந்த சிறுவனின் உறவினரும் அந்த வகுப்பில் இருந்தார். அவர்தான் இந்த வீடியோவை பதிவு செய்தார். பின்னர் அது மாற்றப்பட்டு உள்ளது. நான் தெரிவித்த கருத்தும் சின்ன விசயம்தான். அதை வேறு கண்ணோட்டத்தில் மாற்றிவிட்டனர்.
என்னுடைய உள்நோக்கம் அதுவல்ல. என்னுடைய தவறை ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தேவையின்றி அதை பெரிய விசயமாக மாற்றுகிறார்கள். இதுபோன்று தினமும் வகுப்புகளில் சாதாரணமாக நடக்கும் விசயங்களை பெரிதாக்கினால் எப்படி ஆசிரியர்கள் வகுப்பில் பாடம் எடுப்பது?" என்று கேட்டு உள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ள தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர், சிறுவனின் அடையாளத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு உள்ளார். சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் விளக்கமளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications