மருத்துவமனைக்கு செல்ல விடாமல் சுற்றி நின்ற பசுக்காவலர்கள்.. உ.பி இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலை!
உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் எப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வந்து இருக்கிறது.
Recommended Video
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பசுக்காவலர்களால் இன்ஸ்பெக்டர் எப்படி கொடூரமாக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்த திடுக்கிடும் தகவல்கள் வந்து இருக்கிறது.
உத்தர பிரதேச மாநிலம் புல்சந்தார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நேற்று அங்கு பசுக்காவலர்களுக்கு திடீர் என்று வந்த போனில், புல்சந்தார் காட்டுப்பகுதியில் 25 பசுமாடுகள் கொல்லப்பட்டு கிடக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பசுக்காவலர்கள் இறந்து போன பசுக்களை எடுத்துக் கொண்டு புல்சந்தார் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
போலீஸ் நிலையத்தில் பிரச்சனை
காவல் நிலையத்திற்கு சென்றவர்கள், அங்கேயே பசுக்களை எல்லாம் சுவற்றில் தொங்கவிட்டு இருக்கிறார்கள். அதை தொடர்ந்து அங்கு இருந்த போலீஸ் வாகனங்கள் மீது தீ வைத்து இருக்கிறார்கள். பின் போலீஸ் நிலையம் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். பசுக்கொலையை தடுக்கவில்லை என்று கலவரம் செய்துள்ளனர்.
பெரிய கலவரம்
இதை தொடர்ந்து புல்சந்தார் கிராமத்தில் பெரிய கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வரிசையாக வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல வீடுகள் தீ வைக்கப்பட்டது. இதை கட்டுப்படுத்த உடனடியாக அங்கு 40 பேர் கொண்ட போலீஸ் படை வந்தது. போலீசார் அங்கிருந்த கூட்டத்தின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.
தலையில் சுட்டனர்
இந்த நிலையில் இந்த கலவர கும்பலிடம் மாட்டிக் கொண்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் மோசமாக தாக்கப்பட்டார். அவரை சுற்றி வளைத்த பசுக்காவலர்கள் அதே இடத்தில் போலீஸ் முன்னிலையில் சுட்டுக் கொன்றனர். அவரின் தலையில் சுட்ட பசுக்காவலர்கள், அவரை போலீஸ் வண்டியிலேயே தொங்கவிட்டு சென்றனர்.
மருத்துவமனைக்கு எடுத்து செல்லவில்லை
அதோடு அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் பசுக்காவலர்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அவரை சுற்றி பசுக்காவலர்கள் நின்று கொண்டு இருந்ததாகவும், போலீசாரை அவரின் பக்கத்தில் நெருங்கவிடாமல் பார்த்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால்தான் போலீசால் அவரை காப்பாற்ற முடியவில்லை, இல்லையென்றால் அந்த இன்ஸ்பெக்டர் உயிர் பிழைத்து இருப்பார் என்று கூறுகிறார்கள்.
இன்னொருவரும் பலி
இந்த கலவரத்தில் இன்னொரு நபரும் கொல்லப்பட்டார். பசுக்காவலர்களால் சுமித் என்ற நபர் கொலை செய்யப்பட்டார். இவர் அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது உடலை நேற்று இரவுதான் போலீசார் மீட்டனர்.
|
அதிர்ச்சி வீடியோ
இந்த சம்பவம் குறித்த அதிர்ச்சி வீடியோ வெளியாகி இருக்கிறது. போலீஸ் கீழே சுடப்பட்டு விழுந்து கிடக்கும் காட்சிகள் இதில் பதிவாகி உள்ளது. அவரை சுற்றி பசுக்காவலர்கள் சென்று பார்த்துவிட்டு பின் ஓடுவது இதில் பதிவாகி இருக்கிறது.
பகீர் ரிப்போர்ட்
கலவர கும்பலிடம் மாட்டிக் கொண்ட இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் சிங் கொடுமைப்படுத்தப்பட்டு கொல்லப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவிக்கிறார்கள். போஸ்ட்மார்ட்டம் அறிக்கை அப்படித்தான் குறிப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இவரின் தலையில் சரியாக குண்டு பாயவில்லை, முன்பே மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்றும் தெரிவித்து இருக்கிறார்கள்.