ஆன்லைன் விளையாட்டில் தன்னையே பந்தயமாக கட்டிய பெண்.. இப்போது ஹவுஸ் ஓனர் வசம்.. கலக்கத்தில் கணவர்
லக்னோ: ஆன்லைன் விளையாட்டின் மீதுள்ள மோகத்தால் தன்னையே பந்தயமாக வைத்து விளையாடிய பெண்ணை, அவரது வீட்டு உரிமையாளரே தன்வசமாக்கிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் மோகத்தால் பணம் இழந்து, வீடு இழந்து ஏன் உயிரை கூட பலர் இழந்து வரும் நிலையில், பெண் ஒருவர் தன்னையே இழந்த நிகழ்வு பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
சாதாரண ஆன்லைன் விளையாட்டு தானே இது என்ன செய்துவிடப் போகிறது என நினைப்பவர்களுக்கு, இது எந்த அளவுக்கு நம்மை அடிமையாக்கி ஆபத்துக்குள் தள்ளும் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா.. ஆளுநருக்கு எதிராக சீறும் கம்யூனிஸ்ட் கட்சிகள்.. போராட்டங்கள் அறிவிப்பு
நன்றாக இருந்த குடும்பம்
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள நகர் கோட்வாலி பகுதியைச் சேர்ந்தவர் ரேணு (26). இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியுள்ளது. இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்த கிஷோருக்கு போதிய வருமானம் இல்லாததால், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஓராண்டாக அவர் வேலை செய்து வருகிறார்.
ஆன்லைன் கேமுக்கு அடிமை
இதனிடையே, கணவரை பிரிந்திருந்ததால் ரேணுவுக்கு பொழுதை கழிப்பது பெரும் சிரமமாக இருந்துள்ளது. இதனால் தனது ஸ்மார்ட்போனில் பல ஆன்லைன் கேம்களை விளையாட தொடங்கினார் ரேணு. இதில் அவருக்கு லூடோ விளையாட்டின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. எப்போது பார்த்தாலும் செல்போனும் கையுமாக லூடோ விளையாடி வந்துள்ளார் ரேணு. ஆன்லைனில் விளையாடுவதால் பலருடன் லைவாக விளையாடும் வாய்ப்பும் ரேணுவுக்கு கிடைத்ததுள்ளது. நாட்கள் செல்ல செல்ல, பந்தயம் கட்டி விளையாடும் கும்பலுடன் ஆன்லைனிலேயே ரேணுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
பந்தய விளையாட்டு
இவ்வாறு பணத்தை பந்தயமாக வைத்து விளையாடி வந்திருக்கிறார் ரேணு. கணவன் கஷ்டப்பட்டு உழைத்து அனுப்பும் பணத்தில் 'பெட்' கட்டி விளையாடி இருக்கிறார் அவர். அப்போதுதான், தனது வீட்டு உரிமையாளரும் லூடோ கேம் விளையாடுவது ரேணுவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, இருவரும் தங்களுக்கு இடையே பணம் கட்டி விளையாடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். ஒருகட்டத்தில், லூடோ விளையாட்டுக்கு மிகவும் அடிமையாகிப் போனார் ரேணு.
தன்னையே பந்தயமாக கட்டினார்
இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு, பணம் முழுக்க தீர்ந்ததால், வேறு வழியில்லாமல் தன்னையே பந்தயமாக வைத்து ஆடியுள்ளார் ரேணு. இதற்காக பத்திரம் வாங்கி ஒப்பந்தமும் அவர்கள் செய்திருக்கின்றனர். இந்த சூழலில், லூடோ கேமில் ரேணு தோற்றுப் போக, அவரை அப்படியே அலேக்காக தன் வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டார் ஹவுஸ் ஓனர். இந்த தகவல் அவரது கணவர் கிஷோருக்கு தெரியவர, சொந்த ஊர் வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இதையடுத்து, போலீஸார் இந்த விஷயத்தில் தலையிட்டனர். ஆனால், வீட்டு உரிமையாளரிடம் இருந்து பிரிய, தனக்கு விருப்பமில்லை என ரேணு கூறிவிட்டார். இதனால் என்ன செய்தவென தெரியாமல் கிஷோரும், போலீஸாரும் விழித்துக் கொண்டிருக்கின்றனர்.