ஹலோ 108 ஆ... சீக்கிரம் வாங்க... உ.பி.யில் ஆட்டை ஆம்புலன்ஸில் ஏற்றிய இளைஞர்
லக்னோ: உத்திரபிரதேசம் மாநில கஸ்கஞ்ச் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வேனை அவசரமாக வரவழைத்து அதில் ஆட்டுக்குட்டியை சிகிச்சைக்கு ஏற்றிய விநோத சம்பவம் நடந்துள்ளது.
ஆம்புலன்ஸில் ஆட்டுக்குட்டியை ஏற்றிய இளைஞரை கண்டு அதிர்ச்சியடைந்த அதன் ஓட்டுநர் அந்த இளைஞரை கடுமையாக சாடினார்.
ஆனால் ஒன்றும் தெரியாதது போல் அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ஆட்டுக்குட்டியுடன் ஆம்புலன்ஸில் அமர்ந்துகொண்டு அந்த இளைஞர் இறங்க மறுத்துள்ளார்.

சீக்கிரம் வாங்க
உத்திரப்பிரதேசம் மாநிலம் கஸ்கஞ்ச் மாவட்டம் ஹரியா தேத்ரா கிராமத்தில் இருந்து 108 ஆம்புலன்ஸ் சேவை அவசரக் கட்டுபாட்டு அறைக்கு நேற்று அழைப்பு சென்றுள்ளது. அதை அட்டண்ட் செய்து பேசிய ஊழியரிடம் மறுமுனையில் பேசிய சுனில் என்ற இளைஞர் அவசரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை தங்கள் கிராமத்திற்கு அனுப்புமாறு கேட்டுள்ளார்.

நடவடிக்கை
சுனில் பதற்றத்துடன் பேசியதைக் கேட்ட 108 ஆம்புலன்ஸ் அவசரக் கட்டுபாட்டு அறை ஊழியர், அவசரமாக ஆம்புலன்ஸ் ஒன்றை சுனிலின் கிராமமான ஹரியா தேத்ராவுக்கு அனுப்பி வைத்துள்ளார். ஓட்டுநரும் என்னவோ..ஏதோ என பதறியடித்து கொண்டு அதிவேகமாக சென்று சுனிலை தொடர்புகொண்டுள்ளார்.

ஆட்டுக்குட்டிக்கு காயம்
ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அழைப்பை ஏற்று பேசிய சுனில், வந்துவிட்டீர்களா..இதோ வருகிறேன் கதவை திறந்து வையுங்கள் எனக் கூறியுள்ளார். ஆம்புலன்ஸில் இருந்த அவசர கால முதலுதவி சிகிச்சை அளிக்கும் ஊழியர்கள் தயாராக இருந்துள்ளார்கள். ஆட்டுக்குட்டியுடன் வந்த சுனில் அதனை ஆம்புலன்ஸில் ஏற்றியுள்ளார். இதனைக் கண்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதிர்ச்சி அடைந்ததோடு கடுமையாக சுனிலை சாடினார்.

இறங்க மறுப்பு
ஆட்டுக்கு காயம் ஏற்பட்டதால் அதனை மருத்துவரிடம் தாம் அழைத்துச்செல்வதாகவும், அதற்காகத் தான் ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்ததாகவும் சுனில் தெரிவித்திருக்கிறார். இதனால் கடும் கோபம் அடைந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முதலில் வண்டியில் இருந்து நீ இறங்கு எனக் கூறியுள்ளனர். ஆனால், ஆம்புலன்ஸில் ஆட்டுக்குட்டியுடன் ஏறி அமர்ந்துகொண்ட சுனில் நீண்ட நேரம் அதிலிருந்து இறங்க மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications