பாஜகவில் சேர்ந்த முலாயம் சிங் மருமகள் அபர்ணா யாதவுக்கு நோ சீட்.. வேட்பாளர் பட்டியலில் ருசிகரம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தலைநகர் லக்னோவுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது பாஜக.
பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டசபைத் தேர்தல் மிக விரைவில் நடைபெறவிருக்கிறது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவித்ததில் இருந்து அனைத்து மாநில கட்சிகளும் தேர்தல் வேலைகளில் ஈடுபடத்துவங்கின.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதற்கான முதற்கட்ட தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக வேட்பாளர்களை அறிவித்து வருகிறது.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலை இந்த நாடே உற்று நோக்கி இருக்கிறது. அங்கு ஆளும் பாஜக 17 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தது. அதைத் தக்கவைத்து மீண்டும் ஆட்சியில் அமர பல முயற்சிகளை செய்து வருகிறது. சமாஜ்வாதி கட்சி அவர்களுக்கு போட்டியாக களத்தில் இருக்கிறது. காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளும் போட்டியிட்டு நான்குமுனை போட்டியை உருவாக்கியுள்ளன.

பாஜக
அயோத்தி ராமர் கோயில் கட்டுவதற்கு பாஜக தான் காரணம் என்று பாஜக தன்னுடைய பிரசாரத்தை தொடங்கி இருக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரசாரத்த்ல் ஈடுபட்டனர். 30க்கும் அதிகமான ஸ்டார் பேச்சாளர்களை பிரசாரத்தில் ஈடுபட மாநில பாஜக திட்டமிட்டிருக்கிறது. இந்நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்து வருகிறது பாஜக. முதல்வர் யோகி ஆதித்யநாத் தன்னுடைய சொந்த தொகுதியான கோரக்பூரில் போட்டியிடுகிறார்.

லக்னோ
இந்நிலையில், தலைநகர் லக்னோவில் மீண்டும் தங்கள் பலத்தைக் காட்ட பாஜக விரும்புகிறது. கடந்த தேர்தலில் லக்னோவில் உள்ள 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை பாஜக வென்றது. தற்போது லக்னோவில் உள்ள 9 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது. மீதமுள்ள ஒரு தொகுதியிலும் வென்று ஒன்பது தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக வேட்பாளர்களைப் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறது.

வேட்பாளர்கள்
அமைச்சர் அசுதோஷ் தந்தோன் லக்னோ கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். ரஜ்னீஷ் குப்தா லக்னோ மத்திய தொகுதியில் போட்டியிடுகிறார். லக்னோ கண்டோன்மெண்ட் தொகுதியில் அமைச்சர் பிரிஜேஷ் பதக்குக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. பாஜக இந்த தொகுதியில் நிச்சயம் ஜெயிக்கும் என்று சொல்கிறார்கள். கடந்த தேர்தலில் பாஜகவின் ரீடா பகுகுனா, சமாஜ்வாதி கட்சியில் இருந்த அபர்ணா யாதவை தோற்கடித்தார்.

அபர்ணா யாதவ்
அசுதோஷ் சுக்லா பகவத்நகர் தொகுதியிலும், ராஜேஷ்வர் சிங்குக்கு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது. சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவுக்கு லக்னோவில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அதேபோல், அமைச்சர் ரீடா பகுகுனாவின் மகனுக்கு சீட் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கும் சீட் கொடுக்கப்படவில்லை.












Click it and Unblock the Notifications