உத்தர பிரதேசத்தில் அமைச்சர் மீது ரத்தம் சொட்ட சொட்ட தாக்குதல்.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் எம்பி தொகுதிக்கு வருவதே இல்லை என பாஜக கூட்டணி கட்சியை சேர்ந்த அமைச்சருடன் வாக்கு வாதம் செய்த ஒரு கும்பல், அமைச்சரை சூழ்ந்து திடீரென தாக்குதல் நடத்தினர். இதில், அமைச்சர் சஞ்சய் நிஷாத்தின் மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இங்குள்ள 80 தொகுதிகளுக்கும் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. அதாவது, 7 கட்ட தேர்தலின் போதும் உத்தர பிரதேசத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக தேர்தல் ஜுரம் தொற்றியிருக்க போகிறது.

பாஜக கூட்டணி அமைச்சர்: தேர்தலை முன்னிட்டு அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. உத்தர பிரதேசத்தில் பாஜக கடந்த முறை 61 தொகுதிகளில் வென்றது. இதனால், அந்த கட்சியை வீழ்த்த இந்தியா கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. பிரசாரத்திற்காக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் உத்தரபிரதேசத்தில் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சில இடங்களில் பிரசாரத்திற்கு செல்லும் அமைச்சர்கள், எம்பிக்களுக்கு எதிர்ப்புகளும் கிளம்புகின்றன. அந்த வகையில், தான், உத்தர பிரதேசத்தில் பாஜக கூட்டணியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் மீது ஒரு கும்பல் கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது. பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிஷாத் கட்சியின் தலைவர் சஞ்சய் நிஷாத், கேபினட் அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.
தொகுதிக்கு வருவதே இல்லை: அவருடைய மகன் பிரவீன் நிஷாத், சாந்த் கபீர் நகர் தொகுதி பாஜக எம்பியாக இருக்கிறார். சாந்த் கபீர் நகர் அருகே முகமதுபூர் கதார் கிராமத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உத்தரபிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், தன் ஆதரவாளர்களுடன் சென்றார். அப்போது, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற சிலர், பிரவீன் நிஷாத் எம்பி தொகுதிக்கு வருவது இல்லை என்று சஞ்சய் நிஷாத்திடம் முறையிட்டனர். அப்போது திடீரென கைகலப்பு ஏற்பட்டது..
இதில் அமைச்சர் சஞ்சய் நிஷாத்தை சிலர் தாக்கத் தொடங்கினர். இந்த தாக்குதலில் காயம் அடைந்த சஞ்சய் நிஷாத்துக்கு மூக்கில் இருந்து ரத்தம் கொட்டியது. அவரது மூக்கு கண்ணாடி நொறுங்கியது. ரத்தம் சொட்ட சொட்ட சென்ற அமைச்சரை பாதுகாவலர்கள் மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆஸ்பத்திரியில் தர்ணா: தன்மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அமைச்சர் மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனால், சமாதானம் அடைந்த சஞ்செய் நிஷாத் போராட்டத்தை கைவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிஷாத், ''திருமண நிகழ்ச்சியில் சிலர் கட்சியை விமர்சித்து பேசினர். அவர்களை சமாதானப்படுத்த முயன்றபோது, என்னை தாக்கினர். சாதிய மோதலை தூண்டும் விதமாக அவர்கள் செயல்பட்டார்கள்'' என்று கூறினார்.
4 பேர் கைது: தாக்குதல் குறித்து சஞ்சய் நிஷாத்தின் தனி பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார். அதன்பேரில், முகமதுபூர் கதார் கிராமத்தை சேர்ந்த 8 பேர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்களில், ராகவேந்திர யாதவ், ஜெய்பிரகாஷ் யாதவ், திக்விஜய் யாதவ், அபிஷேக் யாதவ் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மீதமுள்ளவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications