“ஒரே நாள்”.. ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபட நேற்று அனுமதித்த நீதிபதி! இன்று ஓய்வுபெறுகிறார்
லக்னோ: ஞானவாபி மசூதி இடத்தில் இந்துக்கள் வழிபட அனுமதி வழங்கிய வாரணாசி மாவட்ட நீதிபதி ஓய்வுக்கு ஒரு நாள் முன்பாக இந்த தீர்ப்பை அளித்து இருக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் எழுப்பிய நூற்றாண்டு பழமை கொண்ட ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் வெளிச் சுவர் அருகே சிங்கார கவுரி அம்மன் சிலையும் உள்ளது. இந்த மசூதிக்கு இந்து அமைப்பினர் உரிமை கோரி வரும் நிலையில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. தொல்லியல் துறை ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு மசூதியில் சிவலிங்கம் போன்ற கல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அப்பகுதிக்கு சீல் வைக்க நீதிமன்றம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

ஆனால், அது தொழுகைக்கு வருபவர்கள் தூய்மை செய்ய பயன்படுத்தும் தண்ணீர் தொட்டியில் இருந்த நீரூற்று போன்ற அமைப்பு என மசூதி நிர்வாகம் விளக்கமளித்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நேற்று வாரணாசி நீதிமன்றம் ஞானவாபி மசூதியின் கீழ் தளத்தில் உள்ள சிவலிங்கம் எனப்படும் நீரூற்று இருக்கும் இடத்தில் இந்துக்கள் பூஜை செய்ய அனுமதி வழங்கியது. வழிபாடு நடத்துவதற்கான பூசாரியை காசி விசுவநாதர் கோவில் அறக்கட்டளை நியமிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
அந்த நீதிபதியின் பெயர் அஜயா கிருஷ்ணா விஷ்வேசா. இவர் பிறப்பித்த இந்த உத்தரவு ஞானவாபி மசூதி விவகாரத்தில் மிக முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என புகழ்ந்து உள்ளார் கோயில் தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு சங்கர் ஜெயின். வாரணாசி மாவட்ட நீதிமன்றம் வரலாறு படைத்து விட்டதாக அவர் போற்றினார். இதுகுறித்து மசூதியின் இணை செயலாளர் எஸ்.எம்.யாசின் தெரிவிக்கையில், "நாட்டில் நீதியின் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது. மசூதியில் இதுவரை எந்த பூஜையும் நடந்தது இல்லை. அங்கு எந்த சிலைகளும் இல்லை. வெறும் மூங்கில் கம்புகள்தான் உள்ளன. அனைத்துமே பொய்கள். அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை. ஆதாரமே இல்லாமல் நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்." என்றார்.

தேசம் முழுவதும் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கும் உத்தரவை பிறப்பித்த வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி அஜயா கிருஷ்ணா விஷ்வேசாவுக்கு இன்றுதான் கடைசி வேலை நாளாகும். அதாவது இன்றுடன் அவர் ஓய்வுபெற இருக்கிறார். தன்னுடைய ஓய்வுக்கு ஒரு நாள் முன்பாக இத்தகைய ஒரு உத்தரவை அவர் பிறப்பித்து சென்று இருக்கிறார் நீதிபதி அஜயா கிருஷ்ணா விஷ்வேசா.












Click it and Unblock the Notifications