நேரு குடும்ப விசுவாசி! சோனியாவுக்காக ஓடி ஓடி உழைத்தவர்- அமேதியில் களமிறங்கும் கேஎல் சர்மா! யார் இவர்
லக்னோ: அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கிஷோரி லால் சர்மா.. இவருக்கும் நேரு குடும்பத்திற்குமான உறவு எத்தகையது என்பது குறித்துப் பார்க்கலாம்.
உத்தர பிரதேச மாநிலத்தில் நேரு குடும்பம் பாரம்பரியமாகப் போட்டியிடும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளுக்கு நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரஸ் இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

ராகுல் காந்தி: ராகுல் காந்தி மீண்டும் அமேதி தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2004 முதல் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி எம்பியாக இருந்தார். அவர் இந்த முறை ராஜ்யசபாவில் எம்பியாக தேர்வான நிலையில், ராகுல் காந்தி அங்கு களமிறங்குகிறார். பிரியங்கா காந்தி இங்குப் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ராகுல் அங்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அமேதி வேட்பாளர்: அதேநேரம் ராகுல் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட அமேதி தொகுதியில் காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2019ஆம் ஆண்டு வரை இந்த தொகுதி காந்தி குடும்பத்தின் கோட்டையாக இருந்தது. இருப்பினும் 2019 லோக்சபா தேர்தலில் அமேதி தொகுதியில் பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி காங்கிரஸின் ராகுல் காந்தியை வீழ்த்தி இருந்தார்.
2004 முதல் 2019 வரை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி எம்பியாக இருந்த அமேதி தொகுதியில் இந்த முறை கிஷோரி லால் சர்மா வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த கிஷோரி லால் சர்மா என்பது குறித்து பார்க்கலாம்.
யார் இவர்: கிஷோரி லால் சர்மா நேரு குடும்பத்தின் நம்பிக்கைக்குரிய தலைவர்களில் ஒருவர். ரேபரேலியில் சோனியா காந்தியின் பிரதிநிதியாக இருந்தவரே இந்த கேஎல் சர்மா தான்.. நேரு குடும்பத்துடன் தொடர்புடைய விஷயங்களில் ரேபரேலி மற்றும் அமேதியில் முக்கிய நபர் இந்த கிஷோரி லால் சர்மா தான். இவரைத் தான் இப்போது பாஜகவின் ஸ்மிருதி இரானியை எதிராகக் காங்கிரஸ் களமிறக்கியுள்ளது..
கே.எல்.சர்மா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். அவர் முதன்முதலில் 1983 ஆம் ஆண்டு காங்கிரஸ் தொண்டராக அமேதிக்கு வந்தார். அவர் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான மறைந்த ராஜீவ் காந்தியுடன் நல்ல நட்பைக் கொண்டிருந்தார். அமேதியிலேயே தங்கி கட்சிக்காக உழைத்து வந்தார்.
சோனியா காந்திக்காக உழைத்தவர்: 1991இல் ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிறகு, அமேதியில் காங்கிரஸை வலுப்படுத்த அவர் தொடர்ந்து பணியாற்றினார். அவர் மற்ற காங்கிரஸ் வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்வார்.
1999இல் லோக்சபா தேர்தலில் சோனியா காந்தி முதல்முறையாக வென்ற போது அதில் கிஷோரி லால் சர்மா முக்கிய பங்கு வகித்தார். அந்தத் தேர்தலில் சோனியா காந்தி அமேதியில் தான் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications