ஓய்வு பெறும் பிரதமர் மோடி? அடுத்து யோகி ஆதித்யநாத் தானா! வந்து விழுந்த கேள்வி! அவரே சொன்ன பதில்
லக்னோ: பிரதமர் நரேந்திர மோடி வரும் செப்டம்பர் மாதத்துடன் பதவியில் இருந்து விலகப் போவதாக சிவசேனா (தாக்ரே) கட்சியின் சஞ்சய் ராவத் கூறியது பெரும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்த தகவல்களுக்கு இடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசியல் எதிர்காலம் குறித்த கேள்விக்கு மனம் விட்டு ஓபனாக பதிலளித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்குச் சென்றது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. அவர் வரும் செப்டம்பர் மாதத்துடன் ஓய்வு பெறப்போவதாகவும் இது குறித்து ஆலோசிக்கவே ஆர்எஸ்எஸ் தலைமையகம் சென்றதாகவும் சிவசேனா (தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.

யோகி ஆதித்யநாத்
இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடியின் ஓய்வு குறித்த தகவல்களுக்கு இடையே, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது அரசியல் எதிர்காலம் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். வருங்காலப் பிரதமராகப் பொதுமக்கள் யோகியை ஆதரிப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஆதித்யநாத், அரசியலைத் தனது முழுநேர வேலையாகக் கருதவில்லை என்று கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நான் இப்போது மாநில முதல்வராக இருக்கிறேன். இதுவும் கூட கட்சி தான் என்னை உத்தரப் பிரதேச மக்களுக்காக இந்த பொறுப்பை வழங்கியுள்ளது. அரசியல் எனக்கு முழுநேர வேலை அல்ல. நான் ஒருபோதும் என்னை முழு நேர அரசியல்வாதியாகக் கருதியது இல்லை. கட்சி இந்த பதவியைக் கொடுத்ததால் இங்குப் பணி செய்து வருகிறேன். ஆனால் உண்மையில், நான் ஒரு யோகி" என்றார். ஆனால், அடுத்த வரியே, "இங்கு இருக்கும் வரை இந்த வேலையை நான் செய்வேன். ஆனால், இந்த வேலையும் ஒரு கட்டத்தில் முடிந்துவிடும்" என்றார்.
என்ன நடந்தது
முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி பாஜகவின் சித்தாந்த வழிகாட்டியான ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்குச் சென்றிருந்தார். அங்கு அவர் ஆர்எஸ்எஸ் நிறுவனர்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினார். இந்தியாவில் பிரதமர் பதவியில் இருக்கும் ஒரு தலைவர் ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்திற்குச் செல்வது இதுவே முதல்முறையாகும். இந்த பயணத்தை வைத்து செப்டம்பர் மாதத்திற்குள் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்றும், புதிய தலைமைக்கு வழிவகுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் விரும்புவதாக சிவசேனா (தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் கூறியிருந்தார்.
மறுப்பு
அதாவது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பில் 75 வயதைத் தாண்டிய பிறகு தலைவர்கள் பதவியில் இருந்து விலக்கிக்கொள்வார்கள். இது அதிகாரப்பூர்வ விதி இல்லை என்றாலும் கூட இந்த நடைமுறை தான் அங்குப் பின்பற்றப்படுகிறது. இதை வைத்தே சஞ்சய் ராவத் பிரதமர் ஓய்வு பெறப்போவதாகக் கூறியிருந்தார். ஆனால், பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இதைத் திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து வேறுபாடு இருக்கா?
அதேபோல டெல்லி பாஜக தலைமைக்கும் யோகி ஆதித்யநாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகக் கடந்த சில காலமாகவே சொல்லப்பட்டு வருகிறது. இருப்பினும் இதனை யோகி ஆதித்யநாத் முற்றிலுமாக நிராகரித்தார். அவர் மேலும் கூறுகையில், "இதுபோன்ற கருத்துகள் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. நான் இங்கு முதல்வராக இருக்கவே கட்சி தான் காரணம். தலைமையுடன் கருத்து வேறுபாடுகள் இருந்தால் நான் இங்கே தொடர்ந்து முதல்வராக இருக்க முடியுமா?
மேலும், தேர்தலில் யாரைக் களமிறக்கலாம் என்பதைக் கட்சியின் நாடாளுமன்ற குழு தான் முடிவு செய்யும். எல்லா விவாதமும் அங்கு தான் நடக்கும்.. பல்வேறு விஷயங்களை ஆலோசனை செய்தே வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். எனவே சும்மா வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லக்கூடாது. ஆனால், வேண்டும் என்றே இதுபோல பேசுபவர்களை நம்மால் எதுவும் செய்ய முடியாது" என்றார்.












Click it and Unblock the Notifications