அரசு உதவியுடன் எதையும் சாதிக்கும் திறன் பெண்களுக்கு உள்ளது.. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
லக்னோ: அரசின் உதவியுடன் எதையும் சாதிக்கும் திறன் பெண்கள் மத்தியில் உள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.
நாட்டிலேயே மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் பாஜக உள்ளது. வரும் லோக்சபா தேர்தலிலும் வெற்றி கணக்கை தொடரும் நோக்கத்துடன் ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். பெண்களுக்கான மிஷன் சக்தி திட்டம் என்பதை யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

பெண் குழந்தைகளின் தற்காப்புத் திறனை வளர்ப்பது மட்டுமின்றி, பெண்களுக்கான சட்டங்கள் குறித்த விழிப்புணர்வையும், அறிவையும் வளர்க்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. 36,816 கிராம பஞ்சாயத்துகளில், 18 - 40 வயதுக்குட்பட்ட அரசு பெண் ஊழியர்களுக்க ஊரக வளர்ச்சி துறை மூலமாகவும், உள்ளூர் மகளிர் போலீஸ் மூலமாகவும் தற்காப்பு பயிற்சிகள் கற்பிக்கப்படும்.
இந்த நிலையில், இந்த திட்டம் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் லக்னோவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசினார். அப்போது யோகி ஆதித்யநாத் கூறும் போது, "அரசின் உதவியுடன் பெண்களால் எதையும் சாதிக்க முடியும். அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தாலும் அதுபற்றிய விழிப்புணர்வு பயனாளிகளுக்கு அவசியமாகும். அப்போதுதான் பலன்களை உரிய முறையில் பெற முடியும்.
இதற்காக மாநிலத்தில் உள்ள 75 மாவட்டங்களிலும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்படும். அதுபோக ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் காலை நேரத்தில் இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். பெண்களின் நலனை மையமாக கொண்ட மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டங்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நகரங்கள், கிராமங்கள் உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும்" என்றார்.












Click it and Unblock the Notifications