நோ ப்ராப்ளம்.. புலம்பெயர் தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் உத்தரப்பிரதேசம்.. யோகி அடுத்த அதிரடி
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இம்மாநில இளைஞர்கள் வெளி மாநிலங்களில் வேலைக்கு செல்வது குறைந்துள்ளது என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
நாடு முழுவதும் வேலையின்மை விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் வளர்ச்சி என்பது மிகவும் குறைவாக இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, "உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள் அதிக அளவில் வெளி மாநிலங்களுக்கு வேலைக்காக சென்றிருந்தனர். ஆனால் 2017ம் ஆண்டு பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் உள்ளூரில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டது. இந்த திட்டம் வெற்றியும் பெற்றது. உள்ளூரில் உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி வேலைகள் உருவாக்கப்பட்டன. இதன் காரணமாக கணிசமான அளவில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே இளைஞர்கள் புலம் பெயர் தொழிலாளர்களாக மாறுவது குறைக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் மாநிலத்திற்கு சுமார் ரூ.35 லட்சம் கோடி அளவில் முதலீடுகள் குவிந்துள்ளன. இந்த முதலீடுகளில் புதிய தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொழில்கள் மூலம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மறுபுறம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நபர்களாக இளைஞர்கள் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது உத்தரப் பிரசேத்தின் பலம் எம்எஸ்எம்இ எனப்படும் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள்தான். இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தை விடவும் உத்தரப் பிரதேசத்தில்தான் இந்த எம்எஸ்எம்இக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
காரணம் இந்த அரசு புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கிறது. அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அரசு செய்து தருகிறது. புதிய நிறுவனங்கள் தொடங்குவது என்பது ஒரு காலத்தில் பெரும் சவாலான விஷயமாக இருந்தது. ஆனால் தற்போது பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இவர்களுக்கான கடன் தொடங்கி பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறோம். எங்கள் அரசின் திட்டத்தின் படி எல்லாம் சரியாக நடந்தால் அடுத்த 3-4 ஆண்டுகளில் சுமார் 2 கோடி வேலை வாய்ப்புகள் உத்தரப் பிரதேசத்தில் உருவாக்கப்படும். 2 கோடி வேலை வாய்ப்புகள் என்பது சாதாரண விஷயமல்ல. மறுபுறம் நகரமயமாக்கல் தீவிரமாக்கப்பட்டு வருகிறது.
ரூ.35 லட்சம் கோடியில் தொழில்கள் மாநிலத்திற்கு வருகிறது எனில் அதற்கு ஏற்றார்போல கட்டமைப்புகள் உருவாக்கப்படுவது அவசியமாகும். இதற்காக கூடுதல் நிதி பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. எப்படியாயினும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உத்தரப் பிரதேசம் இந்தியாவின் வழிகாட்டி மாநிலமாக உயர்ந்து நிற்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications