பாஜக ஆட்சியில் ஊழல்களும் முறைகேடுகளும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 6 ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேச துணை சேவைகள் தேர்வு ஆணையத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 7,182 உதவி செவிலியர்களுக்கு பணி ஆணைகளை யோகி ஆதித்யநாத் நேற்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த 6 ஆண்டுகளில் எந்த ஒரு தேர்வு முறையிலும் ஊழல், முறைகேடு என எதுவும் நடைபெறவில்லை. ஆட்சேர்ப்பு செயல்முறை இப்போது வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி, மக்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று கூறினார்.

2017ம் ஆண்டு உ.பி-ல் ஆட்சிக்கு வந்த பாஜக அதனை தீவிரமாக கடைப்பிடித்து வருகிறது. எங்களுக்கு அனைத்து மக்களும் ஒன்றுதான். இங்கு எந்த வேறுபாடும் கிடையாது, நாங்கள் யாரிடமும் பாரபட்சத்தை காட்டவில்லை. கடந்த 6 ஆண்டுகளில் 6 லட்சத்துக்கும் அதிகமான அரசு வேலைகளை வழங்கியுள்ளோம். இதில் எந்த முறைகேடும், ஊழலும் நடக்கவில்லை. ஆனால் கடந்த கால அரசு அப்படி இல்லை. வேலைக்காக குறிப்பிட்ட அளவு பணம் வாங்கப்பட்டது.
மாநிலம் முழுவதும் தற்போது சுகாதார திட்டங்கள் சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளன. மூத்த குடிமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் சரியாக செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான மருத்துவ வசதிகள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு தற்போது தனி அடையாளம் கிடைத்திருக்கிறது. இது எல்லாவற்றிற்கும், பாஜக அரசுதான் காரணம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications