வறுமையை ஒழிக்க கல்விதான் உதவும்.. உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தல்
லக்னோ: வறுமையை ஒழிப்பதில் கல்விதான் நமக்கிருக்கும் ஆயுதம் என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இதனை தொடர்ந்து பள்ளிகளுக்கு எல்இடி டிவி மற்றும் கற்றல் கருவிகள் சமீபத்தில் வழங்கினார்

இந்நிலையில் இது குறித்து பேசிய அவர், "வறுமை ஒழிப்பில் கல்வி பெரும் பங்காற்றுகிறது" என்று கூறியுள்ளார். மேலும், "நமது மாநில காவல்துறையில் பெண்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் பாதுகாப்பு விஷயத்தில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் எனில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைக்கப்பட வேண்டும். தற்போது பெண்களுக்கு எதிரான மிகப்பெரிய பிரச்னையாக வரதட்சணை இருக்கிறது. இந்த வரதட்சணையை ஒழிக்க வெகுஜன திருமணம் அவசியமாகிறது.
கடந்த 6 ஆண்டுகளில் அடிப்படைக் கல்வியில் மாநிலம் பெரிய பாய்ச்சலை எட்டியுள்ளது. மூடப்படும் தருவாயில் உள்ள பல பாடசாலைகள் இந்தக் காலப்பகுதியில் புத்துயிர் பெற்றுள்ளன. அரசு தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டிடங்கள், உள்கட்டமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்புடன் கற்பித்தல் தரம் ஆகியவற்றில் கணிசமான மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாஜக ஆட்சி பொறுப்பேற்பதற்கு முன்னர், அதாவது 2017ம் ஆண்டுக்கு முன்பு, இந்த பள்ளிகள் பரிதாபகரமான நிலையில் இருந்தன. ஆனால் பாஜகதான் கல்வியில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது.
அடுத்த 3 ஆண்டுகளில் சுமார் 4,000 அபியுதயா கூட்டுப் பள்ளிகளை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவருக்கும் மாநில அரசு தரமான கல்வியை உறுதி செய்யும். ஒவ்வொரு பள்ளிகளுக்கும் சுமார் ரூ.1.42 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிஜமாகவே மிகப்பெரிய தொகையாகும். அதேபோல 704 பள்ளிகள் அடுத்தக்கட்டத்திற்கு தரம் உயர்த்தப்படுகின்றன. தேசிய கல்விக்கொள்கையில் குறிப்பிட்டுள்ளதுபடி குழந்தைகளின் திறன் மேம்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications