நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஆசிரியர்களால் மட்டுமே முடியும்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: திறமையான சமூகத்தை உருவாக்க செம்மைப்படுத்தப்பட்ட கல்வி முறை அவசியம் என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். அதேபோல நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல ஆசிரியர்களால் மட்டும்தான் முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் புதியதாக ஆசிரியர் பயிற்சியை தொடக்கி வைத்த அவர், ஆசிரியர்களால் மட்டுமே நாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல முடியும் என்று கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் நேற்று முதல் டிசம்பர் மாதம் 10ம் தேதி வரை பயிற்சி வழங்கப்படுகிறது. மொழி மற்றும் கணித பாடங்களில் குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தவே இந்த பயிற்சி வழங்கப்படுகிறது. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமல்லாது தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம் என்று மாநில அரசு அழைப்பு விடுத்திருக்கிறது. இந்த பயிற்சியை தொடங்கி வைத்த யோகி ஆதித்யநாத், மேற்குறிப்பிட்டவாறு கூறியுள்ளார்.
அதேபோல தியோரியா, கோரக்பூர், குஷிநகர் மற்றும் மஹராஜ்கஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் 1,086 பள்ளிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 64 முக்கியமான பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகளையும், தகவல் தொடர்பு ஆய்வகங்களையும் அவர் திறந்து வைத்திருக்கிறார். இதில் உரையாற்றி அவர், "சுய ஒழுக்கம், ஒருங்கிணைந்து பணியாற்றும் உணர்வுகளை வளர்ப்பது, தேசத்தின் நலனுக்காக தங்களை அர்ப்பணிப்பது போன்ற குணாதிசயங்களை குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஆசிரியர்கள்தான் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் 14,360 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 1,207 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. இது எல்லாவற்றிற்கும் ஒரேயொரு நோக்கம்தான் இருக்கிறது. திறமையான மாணவர்களை உருவாக்க வேண்டும் என்பதுதான் அந்த நோக்கம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications