எங்கள் சாதனைகள் உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும்.. உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: போக்குவரத்து நெரிசல் இல்லாத நல்ல சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, பயனுள்ள வடிகால் அமைப்பு, நீடித்த நிலையான வருமானம் போன்றவை இரட்டை என்ஜின் அரசு மூலம் சாத்தியமாக்கப்பட்டிருப்பதாகவும் இது எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில் பாஜகவை வெற்றி பெற செய்யும் என்றும் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் மே 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடங்குகிறது. ஏற்கனவே கடந்த இரண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள நிலையில் இந்த உள்ளாட்சி தேர்தலிலும் பாஜக அதிகாரத்தை கைப்பற்றும் என்று பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாஜக அரசு செய்த சாதனைகள் உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேசத்தில் கைவினை கலைஞர்கள் அதிகம் இருக்கின்றனர். இவர்களை பாஜக அரசு அங்கீகரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பத்மஸ்ரீ தில்ஷாத் ஹுசைனின் கலை படைப்பை பிரதமர் மோடி ஜெர்மன் அதிபருக்கு பரிசாக வழங்கியிருக்கிறார். கடந்த கால ஆட்சியில் இந்த கைவினை கலைஞர்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு போதிய அங்கீகாரம் கொடுக்கப்படவில்லை. ஆனால் பாஜக அரசு இவர்களை அரவணைத்துள்ளது.
பாஜகவை பொறுத்த அளவில் அனைத்து மக்களுக்கும் சமமானவர்கள்தான். யாரும் வேறுபட்டவர்கள் கிடையாது. கைவினை கலைஞர்களும் அதுபோலதான். பாஜக அரசு மேற்கொண்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் காரணமாக தற்போது கைவினை கலைஞர்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. நம்முடைய மாநிலத்திலிருந்து ஏராளமான அளவில் இளைஞர்கள் வெளி மாநிலத்திற்கு புலம் தொழிலாளர்களாக சென்றிருந்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி பெருக்கப்பட்டிருக்கிறது. எனவே வெளி மாநிலத்திற்கு சென்ற இளைஞர்கள் மீண்டும் சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளனர்.
அதேபோல வாரிசு அரசியல் என்பது உத்தரப் பிரதேசத்தின் சாபக்கேடாக இருந்தது. பாஜக எப்போது ஆட்சிக்கு வந்ததோ அப்போதிலிருந்து வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இங்கு சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறது. எனவேதான் போக்குவரத்து நெரிசல் இல்லாத நல்ல சாலைகள், சுத்தமான குடிநீர் வசதி, பயனுள்ள வடிகால் அமைப்பு, நீடித்த நிலையான வருமானம் போன்றவை சாத்தியமாக்கப்பட்டுள்ளன. இந்த வெற்றி உள்ளாட்சி தேர்தலில் பிரதிபலிக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications