இந்தியாவை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதில் உ.பி முக்கிய பங்காற்றும்! யோகி ஆதித்யநாத் உறுதி
லக்னோ: எதிர்வரும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க உத்தரப் பிரதேசம் முதன்மையான காரணமாக இருக்கும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 5-6 ஆண்டுகளில் முதலீடு வேகமாக உயர்ந்துள்ளது. 2047ல் இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக மாறுவதற்கு உ.பி நிச்சயமாக பங்களிக்கும். பொருளாதார வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு கருப்பொருள்களை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஓர் வளர்ந்த நாட்டிற்கு இதெல்லாம் முக்கியமானதாகும்.

வரவிருக்கும் ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் உலகத் தலைவராக மாறும். நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இந்தியாவின் சமூக-பொருளாதார நிலப்பரப்பில் முக்கிய பங்கு வகிக்கும் உ.பி நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும். இது விவசாயம், உற்பத்தி மற்றும் சேவைகள் ஆகியவற்றுடன் கலப்பு பொருளாதாரத்தைக் கொண்டுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலை வேறு மாதிரியாக இருந்தது. தற்போது இந்நிலை மாறியிருக்கிறது.
இதற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 40 நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள் பங்கேற்றிருந்தனர். இதன் மூலம் மாநிலம் ரூ.33 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீட்டுத் திட்டங்களைப் பெற்றது. இப்படியான முதலீடுகள் மூலம் மாநிலம் முழுவதும் ஏழைகளையும் கணிசமான அளவில் மீட்டிருக்கிறோம். தற்போது உ.பி வளர்ச்சிப்பாதையில் பயணித்து வருகிறது.
12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறும் இளைஞர்களுக்கு டேப்லெட், வெறும் 5 ரூபாயில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு, மகள்களின் திருமணத்திற்கு ரூ.55,000 நிதியுதவி. ஏழைக் குடும்பங்களில் பிறந்த பெண்களுக்கு நிதி உதவி, 25,000 இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்புகள் போன்ற திட்டங்கள் மூலம் உத்தரப் பிரதேசம் வளர்ந்து வருகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications