மாவட்டம் தோறும் மருத்துவமனை திட்டம் உ.பியில் மாற்றத்தை ஏற்படுத்தும்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி திட்டம் உத்தரப் பிரதேச வரலாற்றில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார்.

இதன் தொடர்ச்சியாக மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரி எனும் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. மருத்துவக் கல்லூரி அமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் என்று அவர் உத்தரவிட்டிருந்தார். இது குறித்து அவர் பேசியதாவது, "உத்தரப் பிரதேசத்தில் நலத்திட்டங்கள் அனைத்தும் விளிம்புநிலை மக்களுக்கு போய் சேர வேண்டும் என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இந்த அரசின் திட்டங்களை பெறாதவர்கள் யவரும் இருக்கக்கூடாது என்றுதான் நாங்கள் யோசிக்கிறோம். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மாநிலத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது.
உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை கிடையாது. எனவே அவர்கள் கூட்டம் கூட்டமாக வெளி மாநிலங்களில் வேலைக்காக புலம் பெயர் தொழிலாளர்களாக சென்றனர். அங்கு கொத்தடிமை போல நடத்தப்பட்டனர். சரியான உணவு, இருப்பிடம், சுயமரியாதை, சம்பளம் என எதும் முறையாக இல்லாமல் தவித்தனர். ஆனால் பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்னர் இந்த நிலைமை மாற்றப்பட்டிருக்கிறது. இங்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தொழில் வளர்ச்சிக்கு இப்படி கொடுக்கப்படும் முக்கியத்துவத்தை போலவே சமூக வளர்ச்சிக்கும் இந்த பாஜக அரசு முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. அதாவது, மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் மருத்துவ கல்லூரியை உருவாக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்கான அடிப்படை பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளது விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவமனைகள் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்.
தனியார் மருத்துவமனைகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், அரசு மருத்துவமனைகள் சிறப்பான சேவைகளை வழங்கும். இதன் மூலம் மருத்துவ துறையில் ஓர் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். இது மக்களுக்கு நல்ல முறையில் பலனளிக்கும். மாவட்டம் தோறும் மருத்துவமனை திட்டம் உத்தரப் பிரதேச வரலாற்றில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications